6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவ.3ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கன இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஒடிசா, பீகார், தெலங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோலா கோக்ராநாத் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ அரவிந்த் கிரி சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். அதேபோல் மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வான ரமேஷ் கடந்த மே மாதம் காலமானார்.

எம்எல்ஏ-க்கள் உயிரிழப்பு
இதேபோல் பீகார் மாநிலம் கோபால்பஞ்ச் தொகுதி பாஜக எம்எல்ஏ-வான சுபாஷ் சிங் கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். இதனிடையே பீகார் மாநிலத்தின் மொகாமா தொகுதியின் ஆர்ஜேடி எம்எல்ஏ அனந்த் குமார் சிங், ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

நவ.3ல் தேர்தல்
இதேபோல் ஹரியானா மாநிலத்தின் ஆதம்பூர், தெலங்கானா மாநிலத்தின் முனுகோட் மற்றும் ஒடிசா மாநிலத்தின் தாம்நகர் ஆகிய தொகுதிகளும் காலியாக உள்ளது. இந்த நிலையில் 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர்3ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும், நவம்பர் 6ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த 7 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளது. தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அன்றிலிருந்து அமலுக்கு வரும்.

மின்னணு வாக்குப்பதிவு
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்.14 என்றும், வேட்புமனுக்கள் பரிசீலனை அக்.15ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி அக்.17ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications