மெகா ட்விஸ்ட்! முக்கியமான மேட்டரே லிஸ்ட்ல இல்லை.. யார் எந்த கட்சிக்கு நிதி கொடுத்தார்கள்?
டெல்லி: பலரும் எதிர்பார்த்த, தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால், இந்த விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி கொடுத்தது யார் என்று தெரியும், எந்தக் கட்சி எவ்வளவு பெற்றது என்பதும் தெரியும். ஆனால், யார் எந்தக் கட்சிக்கு கொடுத்தார்கள் என்பது தெரியாத வகையில் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க நினைப்போர் எஸ்பிஐ வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி, அதன்மூலம் நன்கொடையை வழங்கலாம்.

தேர்தல் பத்திர நன்கொடை: இதில் நன்கொடை வழங்கியவர்களின் பெயர் விபரம் வெளியே தெரியாது. இந்நிலையில் தான் தேர்தல் பத்திரம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் செல்லாது என அதிரடியாக தீர்ப்பளித்தது.
எஸ்பிஐ இனி தேர்தல் பத்திரம் முறையை கைவிட வேண்டும் என்றும், 2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விபரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் எஸ்பிஐ விபரங்களை வழங்க கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி: 2024 ஜுன் மாதம் 30ஆம் தேதி வரை தேர்தல் பத்திரம் விபரங்களை வழங்க கால அவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரியது. ஆனால் எஸ்பிஐ வங்கியின் இந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் தேர்தல் பத்திர விபரங்களை வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தல் பத்திர விபரங்களை எஸ்பிஐ வங்கி கடந்த மார்ச் 12ஆம் தேதி மாலையில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த விபரங்களை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்: 2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 11 வரை மொத்தம் 3,346 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் 1,609 பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. 2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி 15 வரை மொத்தம் 18,871 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டன. இதில் 20,421 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, 2019 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை எஸ்பிஐ, தேர்தல் ஆணையத்திடம் அளித்த நிலையில், அவை இன்று வெளியிடப்பட்டுள்ளன.
2 பகுதிகளாக லிஸ்ட்: தேர்தல் பத்திர விவரங்கள் 2 பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றில், தேதி வாரியாக அரசியக் கட்சிகள், தேர்தல் பத்திர நிதியை ரொக்கமாக மாற்றிய விவரங்கள், மாற்றிய தொகை ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. தேதி, கட்சி பெயர், தொகை என்ற வரிசையில் 3 காலம் கொண்ட அட்டவணையாக வெளியிடப்பட்டுள்ளது.
மற்றொரு பகுதியில், தேதி வாரியாக, எந்தெந்த நிறுவனம் அல்லது தனி நபர்கள், எவ்வளவு தொகைக்கு தேர்தல் பத்திரங்களாக வாங்கினார்கள் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, வாங்கிய நபர் அல்லது நிறுவனம், வாங்கிய தொகை ஆகியவை 3 வரிசையாக இடம்பெற்றுள்ளன.
முக்கியமான விஷயம் இல்லை: அதேசமயம், யார், எந்தக் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்தார்கள் என்ற விவரம் இந்த பட்டியலில் தெரிவிக்கப்படவில்லை. அதாவது, தேர்தல் பத்திர எண் வெளியிடப்படவில்லை. அதோடு, அந்த பத்திரங்களில் எந்தக் கட்சிக்கு நிதி அளிக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. இதனால், யார் எவ்வளவு நிதி அளித்தார்கள் என்ற விவரம் உள்ளதே தவிர எந்தக் கட்சிக்கு அளித்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.
இதனால், தேர்தல் பத்திர நிதி விவரங்கள் முறையாக வெளியிடப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. தீவிரமான எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் விவரங்கள் முழுமையாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிக நிதி: யார் யார் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்தார்கள் என்ற பட்டியல் 337 பக்கங்களிலும், எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதியை ரொக்கமாக மாற்றின என்ற பட்டியல் 426 பக்கங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி. அதற்கடுத்த இடங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் உள்ளன.
இந்தப் பட்டியலில் வேதாந்தா, மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாக நிதி அளித்துள்ளன.












Click it and Unblock the Notifications