பிரதமர் அழுத்தம்.. அமைச்சர்கள் உயிரிழப்பு.. உதயநிதியின் சர்ச்சை பேச்சு.. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்க உதயநிதிக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
தமிழ்நாட்டில் நேற்று ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் பதிவான வாக்குகள் வரும் மே 2ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

2019இல் நடைபெற்ற மக்களவை தேர்தலைப் போலவே இதிலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தமிழகம் எங்கும் தீவிரமாகப் பிரசாரம் செய்தார். அதிமுக மற்றும் பாஜகவைக் கடுமையாகத் தாக்கி பேசிய உதயநிதி, எய்ம்ஸ் குறித்துப் பேசியது வைரலானது.
அதேநேரம் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரின் மரணங்கள் பற்றி உதயநிதி பேசிய பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது தொடர்பாக உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.
பாஜக அளித்த புகாரில், கடந்த மாதம் 31ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய உதயநிதி, பிரதமர் மோடியின் அழுத்தம் காரணமாகவே முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்தனர் என்று பேசினார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பானது. எனவே. தனது பேச்சு குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்குள் உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவரை கேட்காமலேயே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications