ஜம்மு காஷ்மீரில் மெகபூபா போட்டியிடும் தொகுதி.. தேர்தல் நடைபெறும் தேதி திடீர் மாற்றம்.. காரணம் என்ன?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் வரும் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக இருந்த அனந்தநாக் - ராஜோரி தொகுதியில் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மே 25 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில், 3 ஆம் கட்ட தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தேர்தலுக்கான முழு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் - ராஜோரி தொகுதியில் நடைபெறுவதாக இருந்த் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறுகையில், "இயற்கை தடைகள், பிரசாரம் மேற்கொள்வதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக அரசியல் கட்சிகளிடம் இருந்து வந்த பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் வாக்குப்பதிவு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது வரும் மே 25-ம் தேதி 6-ம் கட்டமாக நடக்கும் தேர்தலோடு அனந்த்நாக் - ரஜோரி தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தேர்தலை ஒத்திவைக்க கூடாது என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டு இருந்தார். அதேபோல் இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் மெகபூபா முப்தி, தனக்கு எதிரானவர்கள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.
நான் லோக்சபாவில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. எனக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆதரவு அதிகரித்துள்ளது. எனவே,தேர்தலை தள்ளிவைத்து முறைகேடு செய்ய தேர்தல் ஆணையத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications