EVM, SLU பாதுகாப்பு நெறிமுறைகளை மாற்றியது தேர்தல் ஆணையம்.. சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து அதிரடி!
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டை (SLU) பாதுகாக்கும் நடைமுறைகளை மாற்றியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடா்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரத்தில், வாக்குகளை குறிப்பிட்ட சின்னத்திற்கு செல்லும் வகையில் மாற்றியமைக்க முடியும் என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை தோ்தல் ஆணையம் தொடா்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே, தோ்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக 100% எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் EVM, VVPAT, SLU உள்ளிட்ட இயந்திரங்கள் தனித்தனியாக சீல் வைக்கப்பட்டு 45 நாள்கள் பாதுகாக்கப்படும் என்றும், ஏதேனும் வழக்கு தொடரப்பட்டால் குறிப்பிட்ட EVM இயந்திரம் மட்டும் பாதுகாக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் செயல்முறை முடிந்ததும், சின்னம் பொருத்தும் யூனிட்டான SLU-விற்கும் சீல் வைக்கப்பட வேண்டும். பதிவாகும் தரவுகள் அனைத்தும் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் மெமரி சிப் ஆகியவற்றை தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு, பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும். இந்த பணியை ஏழு நாட்களுக்குள் செய்ய வேண்டும்.

வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் மின்னணு இயந்திரம் மற்றும் சின்னத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் பார்கோட் அமைக்க முடியுமா என்பதை தேர்தல் ஆணையம் விரைந்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக தற்போது நடந்து வரும் தேர்தலிலேயே சின்னங்களை பொருத்தும் இயந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதாவது மே 1ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வாக்கு இயந்திரங்கள் வைக்கும் ஸ்ட்ராங் ரூம்களிலேயே, சின்னங்கள் பொருத்தும் இயந்திரங்களும் வைக்கப்பட வேண்டும். நூறு சதவீதம் ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும் என்பதையும், அதேபோன்று மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை ஆகிய அனைத்தையும் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்த நீதிபதிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை முழுமையாக எண்ணக் கோரி தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்), விவிபாட், சின்னம் பதிவேற்றும் யூனிட் ஆகியவை சீல் வைக்கப்பட்டு ஒரு பெட்டியில் வைத்து குறைந்தது 45 நாட்களுக்கு ஸ்ட்ராங் ரூமில் பாதுகாக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, இவிஎம் இயந்திரத்தில் சின்னத்தை பதிவேற்றும் யூனிட்டுகள் மற்றும் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகியவற்றை கையாளுதல் மற்றும் பாதுகாத்தலுக்கான நெறிமுறைகளை மாற்றியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சின்னங்களை பதிவேற்றும் யூனிட்டுகளை (SLU) கையாளுதல் மற்றும் பாதுகாப்பதற்கான புதிய நெறிமுறைகளைச் செயல்படுத்த தேவையான உள்கட்டமைப்பு, ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2024 மே 1 அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் விவிபாட் இயந்திரங்களில் சின்னங்களை பதிவேற்றும் செயல்முறைகளுக்கு திருத்தப்பட்ட நெறிமுறைகள் பொருந்தும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications