ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தல் தேதியை மட்டும் இன்று அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை மட்டும் இந்திய தேர்தல் ஆணையத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்று அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 என 3 கட்டங்களாகவும் ஹரியானாவில் அக்டோபர் 1-ந் தேதியும் தேர்தல் நடைபெறும். ஜம்மு காஷ்மீர், ஹரியானா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதேநேரத்தில் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படவில்லை.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளின் பதவி காலங்கள் அடுத்த 6 மாதங்களில் முடிவடைய உள்ளன. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு செய்தியாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, செப்டம்பர் 25, அக்டோபர் 1 என 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். ஹரியானாவில் அக்டோபர் 1-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications