காஷ்மீரில் வரும் மேஜர் மாற்றம்.. விரையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.. இந்த மாதமே வெளியாகும் அறிவிப்பு?
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தத் தேவையான நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் எடுக்கத் தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஜம்மு- காஷ்மீர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் அங்குச் செல்லவுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கடந்த 2019ல் லடாக் மற்றும் காஷ்மீர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டன.

இருப்பினும், காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இதற்கிடையே அங்குத் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
காஷ்மீர் பயணம்: ஜம்மு- காஷ்மீர் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் அங்குச் செல்லவுள்ளனர். வரும் செப். 30ம் தேதிக்குள் காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு வரும் ஆகஸ்ட் 8 முதல் 10ம் தேதி வரை காஷ்மீரில் ஆய்வு செய்ய உள்ளது. இதில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு பகுதியில் உள்ள நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இந்த குழு சந்திக்க உள்ளது. செப்.30ம் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதால் தேர்தல் குறித்த அறிவிப்பை இந்த மாதம் அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஆணையம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றம்: சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த வழக்கின் தீர்ப்பைக் கடந்த ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியது. அப்போது 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அங்குச் சட்டமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த லோக்சபா தேர்தல் உடனேயே காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மே மாதம் காஷ்மீரில் லோக்சபா தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டது.
வழிகாட்டுதல்கள்: இந்தச் சூழலில் தான் இப்போது காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. முன்னதாக கடந்த புதன்கிழமை ஜம்மு- காஷ்மீர் சொந்த மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்ந்து மூன்றாண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் இதேபோன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாமல் இருந்து வருகிறது. அங்குக் கடைசியாக 2014 டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அங்கே கடந்த 2019 டிசம்பர் மாதம் சட்டசபைத் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு முன்னதாக 2019 ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. மேலும், 370வது பிரிவின் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அப்போது முதல் ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னரால் நிர்வகிக்கப்படுகிறது.
துணை நிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரங்கள்: இதற்கிடையே மத்திய அரசு சமீபத்தில் தான் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தைத் திருத்தியது. இந்த திருத்தங்கள் காஷ்மீரின் யூனியன் பிரதேசத்தில் லெப்டினன்ட் கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்குகிறது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் பெரியளவில் அதிகாரங்கள் இல்லையோ.. அதேபோல காஷ்மீரிலும் பல அதிகாரங்கள் லெப்டினன்ட் கவர்னருக்கே வழங்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications