தேர்தல் சீர்திருத்த மசோதா:ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இம்மசோதா லோக்சபாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

லோக்சபாவில் நிறைவேற்றம்
ஆனால் இம்மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் பல கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படும்; மத்திய அரசு உள்நோக்கத்துடன் இச்சட்டத்தை கொண்டுவருகிறது என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தனர். இருந்த போது மத்திய அரசு குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்றியது.

ராஜ்யசபாவில் நிறைவேற்றம்
ராஜ்யசபாவில் இன்று இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ராஜ்யசபாவிலும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் எதிர்ப்புகளுக்கு இடையே ராஜ்யசபாவிலும் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்
தேர்தல் சீர்திருத்த மசோதாவானது தேர்தல் ஆணையத்துக்கு பல அதிகாரங்களையும் வழங்கக் கூடியது. உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி லோக்சபா தேர்தல்கள் வரை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளே வாக்குப் பதிவு மையங்களாக, வாக்கு எண்ணும் மையங்களாக இருந்தன. ஆனால் இனி தேர்தல் ஆணையமே எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் நடவடிக்கைகளாக பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரம் கிடைக்கும். அதாவது சமூக நல கூடங்கள், திருமண மண்டபங்கள் கூட தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.

ஆதார் எண்- வாக்காளர் அடையாள அட்டை
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவை எதிர்க்க காரணம், ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதுதான். இது கட்டாயம் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஆதார் சட்டங்களின் படி இப்படி எல்லாம் ஆதார் எண்ணை பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது. அத்துடன் ஆதார் என்பது முகவரி சான்றிதழ்; வாக்காளர் அடையாள அட்டை என்பது குடியுரிமை சார்ந்தது என்றும் எதிர்க்கட்சிகள் கருத்தை முன்வைக்கின்றன. தற்போதைய தேர்தல் முறையில் பல்வேறு திருத்தங்களை மத்தியில் ஆளும் பாஜக மேற்கொள்வது என்பது 2024 லோக்சபா தேர்தலை கணக்கில் வைத்துதான் என்கிற குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.












Click it and Unblock the Notifications