11 மணி நேரம் கேள்வி கேட்டாங்களே! இன்னும் 4 நாள்தான்.. டிடிவி தினகரனுக்கு மீண்டும் செக்! விடாத டெல்லி
டெல்லி: இரட்டை இலை சின்னத்திற்கான லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. வெறும் 10 நாட்களில் அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் தினகரனுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
Recommended Video
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் உள்ளது. இதற்கு சுகேஷ் சந்திரா என்று இடைத்தரகரிடம் அவர் பணம் கொடுத்ததாகவும் புகார் உள்ளது.
2017ல் அதிமுகவில் மோதல் நிலவிய போது இரட்டை இலை சின்னத்தை பெற கடும் போட்டி நிலவி வந்தது. அப்போது டிடிவி தினகரன் தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பதே புகார்.

ஏற்கனவே கைது
இந்த வழக்கில் ஏற்கனவே கைதாகி விடுதலை செய்யப்பட்டார் டிடிவி தினகரன். அதே சமயம் இந்த வழக்கில் டிடிவி தினகரனை ஏமாற்றியதாக சுகேஷ் சந்திரா மீதும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுகேஷ் சந்திராவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கில் மேற்கொண்டு இதில் விசாரணை நடத்தப்படவில்லை. இதில் விசாரணைக்கு இடைக்கால தடை இருந்தாலும், இன்னொரு பக்கம் அமலாக்கத்துறை வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

வேறு கோணம்
அதில் லஞ்சம் கொடுக்க டிடிவி தினகரனுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதில் விசாரணையை அமலாக்கத்துறை வேகப்படுத்தி உள்ளது. கடந்த வாரம் இதில் தினகரனிம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. காலை 10.40 மணிக்கு டிடிவி தினகரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர் ஆனார். இரவு 10.40 மணி வரை அவரிடம் விடாமல் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை
விசாரணை முடிந்து வெளியே வந்த போது தினகரன்.. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் கண்டிப்பாக ஆஜராவேன். விசாரணைக்கு அழைக்கும்பட்சத்தில் அதில் பங்குபெறுவதில் பிரச்சனை இல்லை. நான் நிரபராதி. இது தொடர்பாக நடக்கும் அனைத்து விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு தருவேன். இதை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.

மீண்டும் சம்மன்
இந்த நிலையில் தற்போது மீண்டும் தினகரனுக்கு டெல்லியில் இருந்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த ஏப்ரல் 12ம் தேதிதான் தினகரன் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு டெல்லியில் ஆஜர் ஆனார். இந்த நிலையில் சரியாக 10 நாட்களில் மீண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் தினகரன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 4 நாட்களில் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயம் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.

டெல்லி செக்?
இந்த வழக்கில் கடந்த முறையே டெல்லி அமலாக்கத்துறை முழுமையாக விசாரணையை முடித்து இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து உள்ளனர். இதனால் அமலாக்கத்துறை தினகரனுக்கு வேறு வகையில் செக் வைக்கிறதா அல்லது வழக்கில் இன்னும் விலகாத மர்மங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இல்லை டெல்லி தரப்பில் இருந்து தினகரனுக்கு வேறு விதமான அழுத்தங்கள் எதுவும் கொடுக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications