EPFO 3.0: மாதச் சம்பளதார்களுக்கு குட் நியூஸ்! இனி பிஎஃப் பணம் எடுக்க அலைய தேவையில்லை! எல்லாமே ஆட்டோமேட்டிக்!
டெல்லி: தொழிலாளர்களுக்கு முக்கிய நிம்மதி தரும் வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய மாற்றங்களை கொண்டு வர தயாராகியுள்ளது. குறிப்பாக, பிஎஃப் இறுதித் தொகையை பெறுவதற்கான நடைமுறை இனி முழுமையாக தானியங்கி முறைக்கு மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓய்வு பெற்ற பிறகு அல்லது வேலைவிட்டு வெளியேறும் போது, பணம் பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இபிஎஃப்ஓ என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் மாதம் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்கிறது. மேலும் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் செலுத்துகின்றன.
இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி மற்றும் பென்ஷன் நிதி ஆகியவை தங்கள் கணக்கில் பராமரிக்கப்படும். பணியில் இருந்து ஓய்வு பெறும் போது இந்த நிதி தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அவசர தேவைக்காகவும் இபிஎஃப்ஓ பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO 3.0
EPFO தற்போது தனது சேவைகளை முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது. புதிய "EPFO 3.0" முறைமையில், கோர் பேங்கிங் மற்றும் API இணைப்புகள் மூலம் உறுப்பினர்கள் தங்கள் பண பரிமாற்றங்களை உடனுக்குடன் பார்க்க முடியும். இதனால் அலுவலகத்து செல்ல வேண்டிய தேவை இல்லை. மேலும், முன்பு 13 பிரிவுகளாக இருந்த பணம் எடுக்கும் விதிகள், தற்போது மூன்று பிரிவுகளாக சுருக்கப்பட்டுள்ளன. அதாவது, அவசர தேவைகள், வீட்டு தேவைகள், சிறப்பு சூழ்நிலைகள் என பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக பணத்தை திரும்பப் பெற முடியும்.
வருங்கால வைப்பு நிதி
இந்நிலையில், தற்போது மிகப்பெரிய மாற்றமாக, பிஎஃப் இறுதித் தொகையை முழுமையாக திரும்பப் பெறும் செயல்முறையையும் தானியங்கி முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது ரூ.5 லட்சம் வரை பகுதி தொகை எடுப்பதற்கு தானியங்கி முறை செயல்பாட்டில் உள்ளது. இந்த முறையில் விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் பணம் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
தானியங்கி பிஎஃப் வசதி
இதே வேகமான முறையை இனி முழு பிஎஃப் தொகை பெறும் நடைமுறைக்கும் விரிவுபடுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள் வேலை விட்டு வெளியேறிய பிறகு அல்லது ஓய்வு பெற்ற பிறகு, அலுவலகங்களுக்கு சென்று ஆவணங்கள் கொடுத்து காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது. விண்ணப்பம் சரியாக இருந்தால், பணம் தானாகவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஓய்வூதிய நிதி
மேலும், வேலை மாற்றும் ஊழியர்களுக்கும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. தற்போது ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, பழைய பிஎஃப் கணக்கிலிருந்து புதிய கணக்குக்கு தொகையை மாற்ற தனியாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இனி இந்த செயல்முறை தானாகவே நடைபெறும். இதனால், பணியாளர்களுக்கு நேரமும் சிரமமும் குறையும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் அடிப்படையில், இபிஎஃப்ஓ தொடர்பான கூடுதல் விதிமுறைகளும் விரைவில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால், கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு பிஎஃப் சேவைகள் மேலும் எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications