எண்ட் கார்டே இல்லையா? அத்தனை கோட்டையும் அழியுங்க! மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக பொதுக்குழு கூட்டமா?
அதிமுகவின் 2022 ஜூன் 23, ஜூலை 11 பொதுக்குழு விவகாரங்களே முடிவுக்கு வராத நிலையில் உச்சநீதிமன்றம் இன்னொரு ஒருங்கிணைந்த அதிமுக பொதுக்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுவேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருந்தபோதும் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இருதரப்பும் பொதுக்குழுவை ஒருங்கிணைந்து கூட்டுமா? அல்லது மாற்று வழிகளை யோசிக்குமா? என்கிற கேள்வியும் அரசியல் பார்வையாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
அதிமுகவின் பொதுக்குழு விவகாரம் என்பது ஆண்டுகள் உருண்டோடினாலும் ஓயாது என்பதாகவே உள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இரண்டாக பிளவுபட்ட நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி நீதிமன்ற தலையீடுகளுக்குப் பின் ஒருங்கிணைந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் புதிய அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய பொதுக்குழுவில் கொண்டுவரப்பட இருந்த தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அதிமுக இபிஎஸ் அணியினர் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவை கூட்டினர். அப்பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஓபிஎஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்டு அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
அதாவது அதிமுகவின் ஜூன் 23, ஜூலை 11 பொதுக்குழுக்கள் பெரும் சர்ச்சையாக வெடித்தன. மேலும் அதிமுக இபிஎஸ் அணி கூட்டிய ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதனை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி விசாரித்து ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்தார். இதற்கு எதிராக இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு தனிநீதிபதிகள், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளுமே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஆனால் அதிமுக இபிஎஸ் அணி சார்பில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு அளித்த தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க முடியாது என்றது. ஓபிஎஸ் தரப்பும், எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர முகாந்திரமே இல்லை என்றது.
இந்த இடையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்; அக்கூட்டத்தில் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும். இந்த பொதுக்குழு தீர்மானித்த வேட்பாளரை அதிமுக அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார் என உத்தரவிட்டுள்ளது. இது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான மட்டுமேயான ஒரு நடைமுறை என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் ஏற்கனவே 2022 ஜுன் 23, 2022 ஜூலை 11 பொதுக்குழு விவகாரங்களே இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் புதியதாக ஒருங்கிணைந்த அதிமுக பொதுக்குழுவை கூட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக பொதுக்குழு கூட்டப்படுமா? அல்லது பொதுக்குழுவை கூட்டாமலேயே இரு அணிகளும் மாற்று வியூகங்கள் வகுக்குமா? என்பது வரும் நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications