"நான் உங்களுக்கு உதவினாலும்" மல்லிகார்ஜூன கார்கேவிடம் வேதனையுடன் பேசிய ராகுல் காந்தி!
டெல்லி: நான் இப்போது உங்களை (மல்லிகார்ஜூன கார்கே) தொட்டால், எனது கையில் இருக்கும் அழுக்கை உங்கள் முதுகில் துடைத்துவிட்டதாக அவர்கள் கூறுவார்கள் என்று பாஜகவை ராகுல் காந்தி சாடும் வகையில் ஆதங்கத்துடன் கூறினார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சூரத் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்ததோடு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது.

ராகுல் காந்தி தகுதி நீக்கம்
ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்ட மார்ச் 23 ஆம் தேதி முதல் தகுதி நீக்கம் அமலுக்கு வருவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் தண்டனை காலமான 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு பிறகு 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகள் ராகுல் காந்தியால் தேர்தலில் போட்டியிட முடியாது.

மல்லிகார்ஜூன கார்கே ஆவேசம்
ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக கூட்டுக்குழு விசாரணை கோருவோம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார். மேலும் ஜனநாயகத்தை காக்க சிறைக்கு செல்லவும் தயராக இருக்கிறோம் என்று ஆவேசமாக பேசினார். ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கையை பிடித்து ராகுல் காந்தி உதவி
இந்த நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு ராகுல் காந்தியும் மல்லிகார்ஜூன் கார்கேவும் கூட்டம் நடைபெற்ற அரங்கில் இருந்து வெளியே வந்தனர். அப்போது படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வர மல்லிகார்ஜூன கார்கேவின் கையை பிடித்து ராகுல் காந்தி உதவி செய்தார்.

அழுக்கை துடைத்ததாக சொல்வார்கள்
அப்போது பாஜகவை சாடிய ராகுல் காந்தி, "நான் இப்போது உங்களை தொட்டால், எனது கையில் இருக்கும் அழுக்கை உங்கள் முதுகில் துடைத்துவிட்டதாக அவர்கள் கூறுவார்கள். முற்றிலும் முட்டாள்தனமானது. நீங்கள் அதை பார்த்தீர்களா? நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அவர்கள் என்னவோ.. நான் எனது அழுக்கை துடைத்ததாக சொல்வார்கள்" என்று அதிருப்தியுடன் கூறினார்.

"டிஸ்யூ பேப்பராக"
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதில், மல்லிகார்ஜூன கார்கேவின் முதுகை ராகுல் காந்தி தடவும் காட்சி இடம்பெற்றிருந்தது. கார்கேவிடம் ராகுல் காந்தி தனது "டிஸ்யூ பேப்பராக" பயன்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் ராகுல் காந்தி இவ்வாறு ஆதங்கத்துடன் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications