டெல்லியில் நேற்று வரை அமைச்சர்.. ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் கைலாஷ் கெலாட்
டெல்லி: நேற்று அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கெலாட் இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் நேற்று வரை போக்குவரத்து அமைச்சராகவும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய ஜாட் தலைவராகவும் இருந்த கைலாஷ் கெலாட் , சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆத்மி அரசில் அமைச்சர் பதவியையும், அக்கட்சியின் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்த மறுநாளே டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார்.

சிபிஐ, வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு பயந்து ஆம் ஆத்மியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்ததாக பரவும் தகவலை கெலாட் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில். "அண்ணா ஹசாரேவின் இயக்கத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்திருந்த எனக்கு இது எளிதான முடிவு கிடையாது. அமலாக்கத்துறை, சிபிஐ தந்த அழுத்தத்தின் கீழ் இந்த முடிவை எடுத்தேன் என்று ஒரு கதையை திட்டமிட்டு பரப்புகிறார்கள்... ஆனால் அதனை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் மாநிலத்திற்கு வளர்ச்சி ஏற்படாது ..
மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதால் ஆம் ஆத்மியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியிருந்தார். மேலும் மக்களின் உரிமைகளுக்குப் பதிலாக எங்களின் சொந்த அரசியல் பிரச்சனைகளுக்காகவே நாங்கள் அதிக அளவில் போராடி வருகிறோம் என்றார். டெல்லி முன்னாள் அமைச்சர் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தில், கட்சி எதிர்கொள்ளும் சமீபத்திய சர்ச்சைகள் மற்றும் மக்களுக்கு நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை மேற்கோள் காட்டியிருந்தார். அவரது ராஜினாமாவை டெல்லி முதல்வர் அதிஷி நேற்று ஏற்றுக்கொண்ட நிலையில் இன்று கெலாட் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், கெலாட் பாஜகவில் இணைந்தது குறித்து கருத்து தெரிவிக்கையில், "அவர் இப்போது சுதந்திரமாக இருக்கிறார், அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்" என்று கூறினார்.
முன்னதாக நேற்று அமைச்சர் கைலாஷ் கெஹ்லோட்டின் ராஜினாமா தொடர்பாக பாஜக மீது ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்தது. மத்திய அரசின் உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயின் அழுத்தத்தால் கெலாட் விலகி உள்ளார் எனறு கூறியிருந்தது. ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறும் போது, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைகளுக்கு மத்தியில் சிறைவாசத்தைத் தவிர்க்க கெலாட் பாஜகவில் சேர்வதை தேர்ந்தெடுத்தார் என்று கூறினார்.
மூத்த ஆம் ஆத்மி கட்சியின் செயலாளரும் எம்.பி.யுமான சஞ்சய் சிங் ராஜினாமா குறித்து கூறும் போது, இது பாஜகவின் அழுக்கு அரசியலின் ஒரு பகுதி என்று அழைத்தார். மேலும் சஞ்சய் சிங் கூறுகையில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை வளையம் காரணம் என்றும். டெல்லி தேர்தலுக்கு முன் மோடி வாஷிங் மெஷின் செயல்பட்டிருக்கிறது. இப்போது இந்த வாஷிங் மெஷின் மூலம் பல நிர்வாகிகள் பாஜகவில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறினார்
இதனிடையே டில்லி ஆம் ஆத்மி அரசில், புதிய அமைச்சராக, நாங்கலோய் ஜாட் தொகுதி எம்.எல்.ஏவான ரகுவிந்தர் ஷோக்கீன் பதவியேற்க உள்ளார். அமைச்சரவையில் இருந்து விலகி பாஜகவில் தன்னை கைலாஷ் கெலாட் இணைத்துக்கொண்ட நிலையில், அந்த துறையை ரகுவிந்தர் ஷோக்கீன் கவனிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications