சூடானில் தவிக்கும் இந்தியர்கள்.. “அமைதி.. ரிஸ்க் எடுக்க வேண்டாம்” : வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
டெல்லி : சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், போர் நிறுத்தத்திற்கு முன்பாக இந்தியர்கள் வெளியே வருவது பாதுகாப்பானது அல்ல என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ தளபதி அப்தெல் பத்தா அல் - புர்ஹான் மற்றும் துணை தளபதி முகமது ஹம்தான் டாக்லோ ஆகியோர் இடையே, சில நாட்களுக்கு முன் பயங்கர மோதல் வெடித்தது. இதில், இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியர் ஒருவரும் இதில் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டுப் போரால் சூடானில் கடுமையான உணவு, குடிநீர், தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே இரு தரப்பினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அங்கு வாழும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் உள்ள 3000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதிப்படும் சூழலில் அவர்களை உடனடியாக பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "டெல்லியில் உள்ள இந்திய அரசின் குழு சூடானில் உள்ள இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர்களுக்கு அறிவுரை கூறி வருகிறது. அமைதியாக இருங்கள், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அதிகாரப்பூர்வ பயணமாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்து, சூடானில் தற்போதைய நிலை குறித்து இருவரும் விவாதித்துள்ளனர்.
இதுகுறித்துக் கூறியுள்ள ஜெய்சங்கர், "சூடானில், ஐ.நா போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கை உண்மையில் அவசியமானது. ஏனெனில் இந்த நேரத்தில், போர்நிறுத்தம் இல்லாவிட்டால், உண்மையில் மக்கள் வெளியே வருவது பாதுகாப்பானது அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா ஒவ்வொருவருடனும் பேசி, அதன் பங்கைச் செய்கிறது. பல இந்தியர்கள் சூடானில் இருப்பதால், இந்த விஷயத்தில் நமக்கு முக்கியமான பொறுப்பு உள்ளது. ராஜதந்திர செயல்முறைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சகர் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, "நாங்கள் இந்தியர்களுக்கு எப்படிப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருகிறோம். சூடானில் கார்டூன் நகரில் இந்திய தூதரகம் செயல்பட்டாலும் தூதரக கட்டிடம் அமைந்துள்ள பகுதியில் சண்டை நடப்பதால் அங்கு இந்தியர்கள் நேரில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications