ஜெனரல் பிபின் ராவத்தை வைத்து அரசியல் விளையாட்டை தொடங்கிய காங்கிரஸ்.. பிரச்சார மேடையில் மெகா கட்அவுட்
டெல்லி: அடுத்தாண்டு நடைபெறும் 5 மாநிலச் சட்டசபை தேர்தல் பரப்புரையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் முக்கிய பேசுபொருளாக ஆகியுள்ளனர். உத்தரகண்ட் தேர்தல் பிரசார பந்தலில் காங்கிரஸ் செய்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்துள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது.
ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு!
முந்தைய தேர்தல்களைப் போலவே இதிலும் மிகப் பெரியளவில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது.
தேர்தல்
தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனைத்து கட்சிகளும் தங்கள் பணிகளைத் தொடங்கிவிட்டன. சமீப நாட்களாகப் பிரதமர் மோடியே உத்தரப் பிரதேச மாநிலத்திற்குப் பல முறை சென்று வந்துவிட்டார். அங்கு பல்வேறு திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்து வருகிறார். அதேபோல கோவா சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சியும் வெளியிட்டுள்ளது. அதேபோல மற்ற மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மெகா கட்அவுட்
இந்தத் தேர்தல் பிரசாரத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக, காங்கிரஸ் என 2 கட்சிகளும் உயிரிழந்த ராணுவ வீரர்களைத் தொடர்பாகப் பிரசார கூட்டத்தில் பேசி வருகின்றனர். குறிப்பாக, கடந்த வியாழக்கிழமை உத்தரகண்ட்டில் ராகுல் காந்தி கலந்துகொண்ட கூட்டத்தில் முப்படை தளபதி பிபின் ராவத்தின் கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அது ராகுல் காந்தி கட் அவுட்டை விட பெரியதாக இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ராணுவ வீரர்கள்
அடுத்தாண்டு நடைபெறும் 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் முன்னாள் மற்றும் இன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பிரசாரத்தின் சமயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த புதன்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டேராடூனில் போர் நினைவுச் சின்னத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்த நினைவிடத்தின் நுழைவு வாயிலுக்கு ஜெனரல் பிபின் ராவத்தின் பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆளுங்கட்சி சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
மாபெரும் பேரணி
அதேபோல காங்கிரஸ் கட்சியும் ராணுவ வீரர்களின் குடும்பங்களைக் கவுரவிக்க சில முக்கிய திட்டங்களை வைத்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'விஜய் சம்மான் பேரணி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பேரணியில் ராணுவ வீரர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
Recommended Video
காங்கிரஸ்
இது தொடர்பாக உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் கூறுகையில், "ஜெனரல் பிபின் ராவத் நாட்டிற்காக பெருமை சேர்த்தவர். உத்தரகண்ட் மாநிலத்துடன் அவருக்கு முக்கிய தொடர்பு உள்ளது. நாட்டின் மிகச் சிறந்த ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே அவருக்கு கட்அவுட்களை வைத்துள்ளோம். பேரணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாஜக சாடல்
அதேநேரம் காங்கிரஸ் தேவையில்லாமல் ஜெனரல் பிபின் ராவத்தை அரசியலுக்கு இழுப்பதாக பாஜக சாடியுள்ளது. இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் விபின் கைந்தோலா கூறுகையில், "காங்கிரஸின் ராணுவ வீரர்கள் மீதான திடீர் பாசம் இந்த தேர்தல் காலத்தில் புரிகிறது. அவர்கள் தங்கள் அரசியல் லாபத்திற்காக ஜெனரல் ராவத்தை பயன்படுத்தக் கூடாது" என்றார்.