பாரத் 'பந்த்': விவசாயிகள் போராட்டம் .. கடைகள் அடைப்பு.. ரயில் சேவை பாதிப்பு.. ராகுல் காந்தி ஆதரவு!
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில்( பாரத் 'பந்த்') ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video

விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பல இடங்களில் ரயில் சேவை பாதிப்பட்டுள்ளது.
விவசாயிகளின் பாரத் 'பந்த்' க்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆதரவு கொடுத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 100 நாட்களை கடந்து நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் மத்திய அரசு அவர்களின் கோரிக்கையை இதுவரை செவிசாய்க்கவில்லை.

திசைமாறிய பேரணி
இது தொடர்பாக பலகட்டமாக மத்திய அமைச்சர்கள் விவசாயிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டனர். ஆனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போராட்டம் திசை மாறியது. ஆனால் அதன்பின்பும் மனம் தளராமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளின் பாரத் 'பந்த்'
தற்போது மேற்கு வங்கத்திலும், அசாமில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு சென்ற விவசாயிகள் பாஜகவுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடடனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களை கண்டித்து நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு தழுவிய பாரத் 'பந்த்'தில் ஈடுபட போவதாகவும், மக்கள் இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தினார். இந்த நிலையில் நாடு முழுவதும் விவசாயிகள் பாரத் 'பந்த்' போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
பஞ்சாப், உத்தரபிரசதேசம், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாயிகள் தண்டவாளங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் கூடி மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். முக்கிய சாலைகளில் அமர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் பல நகரங்களில் விவசாயிகளுக்கு ஆதாரவாக வணிகர்கள் கடைகளை அடைத்துள்ளனர்.

ராகுல் காந்தி ஆதரவு
இந்த நிலையில் விவசாயிகளின் பாரத் 'பந்த்' க்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆதரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கொடுமைகள், அநீதிகள் மற்றும் ஆணவங்களுக்கு சத்தியாக்கிரகம் முடிவு கட்டும் என்பதற்கு இந்திய வரலாறு ஒரு சாட்சி. இந்த இயக்கம் நாட்டின் நலனுக்காக அமைதியாக இருக்கட்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ராகுல் காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications