நாடாளுமன்றம் நோக்கி ஒரு லட்சம் விவசாயிகள் பேரணி.. உச்சகட்ட பரபரப்பில் டெல்லி
Recommended Video
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் இன்று 29 மாநில விவசாய சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி செல்ல உள்ளனர்.
நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்பு குழு அழைப்பின் பேரில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் டெல்லி சென்றுள்ளனர். "கடனில்லா விவசாயி, தற்கொலை இல்லா இந்தியா" என்பது இவர்களின் முழக்கமாகும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும், விளைபொருட்களுக்கு உரிய விலை, பயிர் கடன் தள்ளுபடி, நாடாளுமன்றத்தில் விவசாயத்திற்கு தனியாக கூட்டத் தொடர் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஊர்வலமாக செல்லவுள்ளனர். இந்த பேரணியில் விவசாயிகள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்கிறார்கள்.
இன்றைய பேரணியின்போது, நாடாளுமன்ற சாலையில் எதிர்க் கட்சி தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.