பா.ஜ.க தலைவர்களை குறிவைக்கும் விவசாயிகள்..பா.ஜ.க.வின் 2 கூட்டத்துக்கு கடும் எதிர்ப்பு.. ரத்து!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் நடத்தும் போராட்டம் 8 மாதங்களை எட்டி விட்டது.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடரும் போராட்டம்
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

5 மாநில தேர்தல்
விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் அங்கு மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.இதற்கு முன்னதாக ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக நடத்தும் விழாக்கள், அரசியல் கூட்டங்களை தடுத்து நிறுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

விவசாயிகள் எச்சரிக்கை
இந்த நிலையில் ஹரியானா மாவட்டங்களில் இரண்டு பா.ஜ.க நிகழ்வுகளுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹரியானா யமுநானகரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் மாநில போக்குவரத்து அமைச்சர் மூல்சந்த் சர்மா இன்று உரையாற்றவிருந்தார்.பாஜக-ஜன்னாயக் ஜனதா கட்சித் தலைவர்கள் மாவட்டத்தில் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் உரையாற்ற அனுமதிக்கக் கூடாது என்று விவசாயிகள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

பாஜக விழா ரத்து
இத்தகைய அச்சுறுத்தலைத் தொடர்ந்து அந்த பகுதியில் தடுப்புகளுடன் அதிக எண்ணிக்கையில் போலீசார் நிறுத்தப்பட்டனர். ஆனாலும் விவசாயிகள் டிராக்டர்களில் வந்து தடுப்புகளை அகற்றினர். ஹிஸாரில் குஜா ஜம்பேஸ்வர் பல்கலைக்கழகத்தில் ஒரு நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் உரையாற்ற இருந்தார். அந்த இடத்துக்கு திரண்டு வந்த விவசாயிகள் பாஜக கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் பாஜகவின் விழா ரத்து செய்யப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.












Click it and Unblock the Notifications