பந்த்.. டெல்லியை சுற்றி விவசாயிகள் போராட்டம்.. முடங்கிய போக்குவரத்து.. பல்லாயிரம் பேர் பங்கேற்பு!
டெல்லி: விவசாயிகள் நடத்தி வரும் பாரத் பந்தை தொடர்ந்து டெல்லியின் எல்லைகள் முடக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 4 மாதங்களாக விவசாய போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போது நாடு முழுக்க பாரத் பந்த் நடந்து வருகிறது.
40 விவசாய சங்கங்களின் அழைப்பின் பெயரில் நாடு முழுக்க இந்த பந்த் கடைபிடிக்கப்படுகிறது. இந்த பாரத் பந்தை தொடர்ந்து டெல்லியின் எல்லைகள் முடக்கப்பட்டு உள்ளது. டெல்லி ஹரியானா எல்லை, டெல்லி உத்தர பிரதேச எல்லைகளில் தீவிரமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
முக்கியமாக சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதிலும் காசிப்பூர் டோல்கேட் பகுதியில் மிக அதிக அளவில் விவசாயிகள் குவிந்து சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை செய்து வருகிறார்கள்.
இத்தனை நாட்கள் சாலை மறியல் போராட்டங்களில் மட்டும் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பாரத் பந்த் காரணமாக இன்று ரயில் மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனால் டெல்லி நோக்கி செல்லும், டெல்லியை விட்டு வெளியே செல்லும் ரயில்கள் ஸ்தம்பித்தது.
பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளும், ரயில்களும் இதனால் மொத்தமாக முடங்கியது. கடந்த 120 நாட்களில் போராடிய விவசாயிகளை விட அதிக எண்ணிக்கையில் தற்போது விவசாயிகள் எல்லையில் போராடி வருகிறார்கள்.
பாரத் பந்தை தொடர்ந்து டெல்லி எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லை இந்த போராட்டம் காரணமாக இயல்பை விட அதிக பதற்றமாக காணப்படுகிறது.