அசராத விவசாயிகள்.. டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடல்.. போக்குவரத்து மாற்றம்
டெல்லி: விவசாயிகள் போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் தொடர்ந்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் 11 முறையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.
சிங்கு, திக்ரி எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி அமைத்து, அங்கேயே தங்கி சமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நூறாவது நாளான இன்று, குண்ட்லி - மானேஸர்-பல்வால் அதிவேக விரைவுச்சாலையை இன்று 5 மணி நேரம் முடக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்நிலையில், போராட்டம் காரணமாக சிங்கு மற்றும் திக்ரி எல்லைகள் தொடர்ந்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளன. சில்லா எல்லை போக்குவரத்து திறந்திருக்கும். அதே வேளையில், காசிப்பூர் எல்லை டெல்லியில் இருந்து காஸியாபாத் செல்லும் போக்குவரத்துக்கு மட்டுமே திறந்திருக்கும்.
உத்தரபிரதேசத்திலிருந்து டெல்லி நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் காசிப்பூர் எல்லையைக் கடந்து செல்ல முடியாது. அதற்கு பதில் ஆனந்த் விஹார், டி.என்.டி, லோனி மற்றும் அப்சரா எல்லைகளை கடந்து செல்லும் மாற்று வழித்தடங்களை தேர்வு செய்யுமாறு டெல்லி போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியார்களுக்கு தடுப்பூசி... வழங்கும் முன் ஏற்றுமதி ஏன்? மத்திய அரசுக்கு டெல்லி ஹைகோர்ட் குட்டு
டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான நுழைவு மற்றும் எக்ஸிட் இடங்கள், சிங்கு, திக்ரி, ஆச்சந்தி, பியாவ் மணியாரி மற்றும் சபோலி மற்றும் மங்கேஷ் எல்லைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
ஆகவே, லம்பூர், சஃபியாபாத், பல்லா மற்றும் சிங்கு போன்ற மாற்று வழிகள் வழியாக பயணிக்க வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். முகர்பா சவுக் மற்றும் ஜி.டி.கே சாலையில் இருந்து போக்குவரத்தை போலீசார் திருப்பி வருகின்றனர்.