பக்காவாக திட்டமிடப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம்.. எங்கு நடைபெறுகிறது? யாரெல்லாம் பங்கேற்பு?
டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் அறிவித்துள்ள உண்ணாவிரத போராட்டம் எங்கெல்லாம் நடைபெறுகிறது? எப்படியெல்லாம் நடத்த போகிறார்கள்?
விவசாயிகளுக்கு பாதகத்தை தரும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு கடந்த 25 தினங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதுவரை 5 முறை மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் விவசாயிகளோ எங்கள் கோரிக்கை திருத்தம் அல்ல, ரத்து செய்வதுதான் என்கிறார்கள்.
இதனால் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர உண்ணாவிரத போராட்டத்தை விவசாயிகள் அறிவித்துள்ளார்கள். போராட்டக் களங்களில் 12 விவசாய அமைப்புகள் முதலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவர்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு அடுத்த 11 விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்பர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ள 12 அமைப்புகள் பின்வருமாறு:

1. ஜெய்கிசான் அமைப்பை சேர்ந்த ரவீந்தர்பால் கவுர் கில்
2. பாரதிய கிசான் சங்க (சித்பூர்) தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால்
3. பஞ்சாப் தோபா விவசாயிகள் சங்கத்தின் நிதி துறை செயலாளர் குல்தீப் சிங் தயாளா
4. பஞ்சாப் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ஃபர்மான் சிங் சாது
5. பஞ்சாப் கிசான் சங்கத்தின் மாநில தலைவர் புட்டா சிங் சக்ரா
6. பஞ்சாப் ஜனநாயக கிசான் சபா தலைவர் டாக்டர் சத்னம் சிங் அஜ்னாலா
7. பஞ்சாப் புரட்சி விவசாய அமைப்பின் தலைவர் அவதார் சிங் கவுர்ஜீவாலா
8. கீர்த்தி கிசான் சங்கத்தின் பூபிந்தர் சிங் லாங்கோவால்
9. தோபா கிசான் சமிதியின் தலைவர் ஜங்பீர் சிங் சவுகான்
10. தோபா கிசான் சங்கர்ஷ் சமிதியின் முகேஷ் சந்திரா
11. குல்ஹிந்த் கிசான் சபா (பலான்வால்) பல்ஜித் சிங்
12. பொது நீதித் துறைத் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா
குழு உண்ணாவிரத போராட்டம் என்றால் என்ன? ஒரு தனிநபர் நடத்துவது அல்ல குழு உண்ணாவிரத போராட்டம். ஒரு குழுவினர் உண்ணாவிரதத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு நடத்தி முடிப்பர். அதற்கு அடுத்த அடுத்த குழுவினர் குறிப்பிட்ட நேரத்திற்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவர்.

ஹரியானா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வரும் டிசம்பர் 25 முதல் 27 ஆம் தேதி வரை விவசாயிகள் முற்றுகையிடுவர். டிசம்பர் 23-ஆம் தேதி விவசாயிகள் தினம். அன்றைய தினம் மக்கள் யாரும் உணவை சமைக்க வேண்டாம் என விவசாய சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. டிசம்பர் 27-ஆம் தேதி பிரதமரின் மன்கீ பாத் நிகழ்ச்சியில் அவர் பேசும் போது அனைவரும் தட்டுகளில் தாளம் போடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
விவசாய அமைப்புகளின் பேஸ்புக் பக்கத்தை முடக்குவதால் பாஜக அரசின் முகத்தை மறைத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. மேலும் விவசாயிகளின் போராட்டமும் கோரிக்கைகளும் சுயமரியாதை, மண்ணின் மைந்தர்கள், உயிர் வாழும் உரிமை, தொழிலாளர்களின் மரியாதை ஆகிய 4 வலிமையான தூண்கள் ஆகும். இவற்றை எந்த வித சூழ்ச்சியாலும் யாராலும் உடைக்கவோ அசைக்கவோ முடியாது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications