அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்... நிபந்தனைகள் அதேதான்- விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்
டெல்லி: மத்திய அரசு அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றாக வேண்டும் என்கிற நிபந்தனையை மீண்டும் முன்வைப்போம் என்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு என்பது 1.60 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது.
இந்த நிலையிலும் டெல்லியில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடருகிறது. டெல்லி எல்லைகளில் 6 மாதங்களாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.
இதனிடையே விவசாயிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்; கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்கிற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், ஜனவரி 22-ந் தேதியன்று மத்திய அரசுடன் கடைசியாக பேச்சுவார்த்தை நடத்தினோம். மத்திய அரசு மீண்டும் அழைத்தால் பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாராக இருக்கிறோம்.
அதேநேரத்தில் 3 கறுப்பு விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளைத்தான் நாங்கள் மீண்டும் முன்வைப்போம். கொரோனா பரவலை முன்வைத்து எங்களது போராட்டத்தை நீர்த்து போக செய்துவிட முடியாது என்றார்.