சுமூக முடிவு எட்டவில்லை.. போராட்டம் தொடரும்.. டெல்லி விவசாயிகள் திட்டவட்டம்
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கத்தை சேர்ந்த சந்தா சிங் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பில் சுமூக முடிவு எட்டப்படாததால் நாளை மறுதினம் அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் அந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரி டெல்லி சலோ எனும் போராட்டம் நடத்தப்படுகிறது.

கடந்த 6 நாட்களாக விவசாயிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்துள்ளனர். மேலும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கி டிராக்டர்களில் கும்பல் கும்பலாக வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கலந்து கொண்டன. இதனால் அவர்களை டெல்லி- ஹரியாணா சாலையில் உள்ள குண்டலி எல்லையிலேயே நிறுத்தப்பட்டனர். எனினும் எங்கெல்லாம் தடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் ஒரு மேடை அமைத்து போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து வருகிறார்கள்.
சோனிபட், ரோத்தக், ஜெய்ப்பூர், காசியாபாத்- ஹாப்பூர், மதுரா ஆகிய டெல்லிக்கு வரும் வழித்தடங்களை முற்றுகையிடவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் வரும் 3-ஆம் தேதி மத்திய அமைச்சருடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது.
ஆனால் முன்கூட்டியே இன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் இல்லத்தில் விவசாய பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என மத்திய அரசு உறுதியளித்த நிலையில் மற்ற கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி வரும் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
Our movement against Farm Laws will continue & we'll definitely take back something from the Govt, be it bullets or a peaceful solution. We'll come back for more discussions with them: Chanda Singh, Member of Farmers' Delegation who met Union Agriculture Minister in Delhi today pic.twitter.com/YgenF7koXN
— ANI (@ANI) December 1, 2020
ஆனால் அதுவரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகளில் ஒருவரான சந்தா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில் விவசாயச் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும்.
மத்திய அரசிடம் இருந்து ஏதாவது ஒன்றை நாங்கள் பெற்றே ஆக வேண்டும். அது தோட்டாக்களாக இருந்தாலும் சரி, நல்ல சுமூகமான தீர்வாக இருந்தாலும் சரி என்றார் சந்தா சிங். இதுகுறித்து மற்றொரு விவசாய சங்க பிரதிநிதியான ரூப் சிங் சன்ஹா கூறுகையில் விவசாய சட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு கூறியதை ஏற்க மறுத்துவிட்டோம்.
மத்திய அரசுடன் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து விவசாய சங்கத் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹான் தொலைபேசி மூலம் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை குறித்து வேளாண்துறை அமைச்சர் டோமர் கூறுகையில் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். நாங்கள் அவர்களை மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சந்திக்கவுள்ளோம்.
குறைந்த அளவிலான பிரதிநிதிகள் மட்டும் வாருங்கள் என கூறியிருந்தோம். ஆனால் அவர்களோ 30-க்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக தெரிவித்தனர். இதற்கும் நாங்கள் ஒப்புக் கொண்டோம் என்றார்.












Click it and Unblock the Notifications