மீண்டும் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்! ஆக.1-ல் பாஜக கொடும்பாவி எரிப்பு; ஆக.15-ல் டிராக்டர் பேரணி!
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக உலகையே உலுக்கி மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அரசை பணியவைத்த விவசாயிகள் போராட்டம் மீண்டும் வெடிக்க காத்திருக்கிறது. விவசாயிகள் போராட்டத்தின் போது மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை சட்டமாக நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ந் தேதி பாஜக கொடும்பாவி எரிப்பும் ஆகஸ்ட் 15-ந் தேதி நாடு தழுவிய டிராக்டர் பேரணியும் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக 2020-2021 ஆம் ஆண்டு டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு விவசாயிகள் பெரும் போராட்டம் நடத்தினர். ஓராண்டாக டெல்லி எல்லைகளில் குளிர், பனி, வெயில், அனல் காற்றுக்கு நடுவே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் மொத்தம் 700 பேர் பலியாகினர். இதனையடுத்து மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. பிரதமர் மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிளைசட்டமாக நிறைவேற்றக் கோரி டெல்லி நோக்கி பேரணியாக கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் புறப்பட்டனர். ஆனால் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தற்போதும் ஷம்பு எல்லையில் முகாமிட்டு விவசாயிகள் போராடி வருகின்றனர். ஷம்பு எல்லையை திறக்க ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அம்மாநில அரசு மறுத்து வருகிறது.
ஷம்பு எல்லை போராட்டம் 100 நாட்களைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 1-ந் தேதி பாஜக கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை விவசாயிகள் நடத்த உள்ளனர். நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாஜகவின் கொடும்பாவி உருவம் எரிக்கப்பட உள்ளதாம். அத்துடன் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின நாளில் நாடு தழுவிய அளவில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனவும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. ஷம்பு எல்லை எப்போது திறந்தாலும் டெல்லி நோக்கி போராடுவதற்காக டிராக்டர்களில் புறப்படுவோம் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 31-ந் தேதி அனைத்து விவசாயிகளும் குடும்பம் குடும்பமாக ஷம்பு எல்லையில் ஒன்று திரள வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications