ஜார்க்கண்ட், வயநாடு தொகுதியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்- பிரியங்காவுக்காக தீவிர பிரசாரம்!
டெல்லி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் மற்றும் வயநாடு லோக்சபா தொகுதி, இடைத் தேர்தல் நடைபெறும் 47 சட்டசபை தொகுதிகளில் நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜார்க்கண்ட் முதல் கட்ட சட்டசபை தேர்தல் 43 தொகுதிகளில் நவம்பர் 13-ந் தேதி நடைபெறுகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 13-ந் தேதி 43 தொகுதிகளிலும் எஞ்சிய 38 தொகுதிகளில் நவம்பர் 20-ந் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறும்.

இதேபோல பல்வேறு மாநிலங்களில் உள்ள 47 சட்டசபை தொகுதிகளிலும் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் கேரளாவின் வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தலும் நவம்பர் 13-ல் நடைபெற உள்ளது.
நவம்பர் 13-ந் தேதி தேர்தல் நடைபெறும் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 43 தொகுதிகள், இடைத்தேர்தல் நடைபெறும் 47 சட்டசபை தொகுதிகள் மற்றும் வயநாடு லோக்சபா தொகுதியில் நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. இந்த தொகுதிகளில் வரும் 25-ந் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் பெறப்படும்.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 28-ல் நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற அக்டோபர் 30 இறுதி நாள்.
இதனிடையே வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை ஆதரித்து தீவிர பிரசாரத்தை காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பிரியங்கா காந்தியின் படத்துடனான பதாகைகள், சுவரொட்டிகளுடன் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்பியானார். உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு லோக்சபா தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications