சர்வாதிகார ஆட்சியில் இருந்து ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க இதுவே கடைசி வாய்ப்பு: மன்மோகன் சிங்
டெல்லி: பஞ்சாப் மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், இதுவே நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கக் கடைசி வாய்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டில் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் 6 கட்ட தேர்தல் முடிந்துவிட்டது.. இன்னும் கடைசிக் கட்ட தேர்தல் மட்டும் நடக்க உள்ளது.

மன்மோகன் சிங்: பஞ்சாப், உபி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை மறுநாள் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கிடையே முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் பஞ்சாப் மக்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடிய மன்மோகன் சிங், நாட்டின் ஜிபிடி வளர்ச்சி, விவசாயிகள் போராட்டம், வேலையின்மை என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பல முக்கிய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு சர்வாதிகார ஆட்சியில் இருந்து நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொள்ள இதுவே கடைசி வாய்ப்பு என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் கற்பனை செய்ய முடியாத சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மன்மோகன் சிங் தனது மூன்று பக்க கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம்: மன்மோகன் சிங் தனது கடிதத்தில், "பணமதிப்பிழப்பு அறிவிப்பு பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி மற்றும் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி ஆறு முதல் ஏழு சதவீதம் வரை இருப்பதே நார்மல் என்ற தோற்றத்தைக் கொடுத்துள்ளது.
பாஜக ஆட்சியில் சராசரி ஜிடிபி வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ்-யுபிஏ ஆட்சிக் காலத்தில் அது சுமார் எட்டு சதவீதமாக இருந்தது . வேலையின்மை மற்றும் உயர்ந்து வரும் பணவீக்கம் ஆகியவை சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை அதிகரித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இந்தளவுக்குச் சமத்துவமின்மை இருந்ததே இல்லை" என்று கூறியுள்ளார்.
ஊதிய ஏற்றத்தாழ்வு: மேலும், நாட்டில் நிலவும் ஊதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் பெரியளவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று இந்தியாவின் பணக்காரர்கள் தேசிய வருமானத்தில் அதிக பங்கைக் கொண்டுள்ளதாக உலக சமத்துவமின்மை ஆய்வக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், அதைக் குறிப்பிடும் வகையில் மன்மோகன் சிங் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளார்.
நாட்டில் சுமார் 30 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வினாத்தாள்கள் முன்கூட்டியே லீக் ஆகும் சம்பவங்கள் தொடர் கதையாகியுள்ளதாகவும் இது இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளியுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் காங்கிரஸ் வாக்குறுதியைக் குறிப்பிட்ட மன்மோகன் சிங், "30 லட்சம் காலியிடங்கள் முறையாக நாங்கள் நிரப்புவோம் என்று உறுதியளித்துள்ளோம். அதில் பாதி வேலைகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.. கேள்வித்தாள்கள் லீக் ஆகும் விவகாரம் குறித்து விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார்..
அக்னிவீர்: அக்னிவீர் திட்டம் குறித்து அவர் தனது கடிதத்தில், "பாஜக அரசு நமது ஆயுதப் படைகளில் அக்னிவீர் என்ற தவறான ஒரு திட்டத்தைத் திணித்துள்ளது. தேசபக்தி, வீரம் மற்றும் சேவையின் மதிப்பு நான்கு ஆண்டுகள் மட்டுமே என்று பாஜக நினைக்கிறது. இது அவர்களின் போலி தேசியவாதத்தைக் காட்டுகிறது" என்று அவர் சாடியுள்ளார்.
முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் அதற்கு முன்பும் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த 1982 முதல் 1985 வரை 15ஆவது ரிசர்வ் வாங்கி கவர்னராக இருந்துள்ளார். மேலும், 1991ல் இந்தியப் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது மன்மோகன் சிங் தான் நிதியமைச்சராக இருந்து அந்த அறிவிப்பை வெளியிட்டார். ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ள மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் நாட்டின் 13ஆவது பிரதமராகவும் இருந்துள்ளார்..












Click it and Unblock the Notifications