புதிய நாடாளுமன்றம் - சவப்பெட்டி ஆர்ஜேடி ட்வீட்டால் பொங்கி எழுந்த பாஜக! “கடைசி ஆணி”.. சரமாரி அட்டாக்!
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்துள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெளியிட்டுள்ள ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதற்கு மாற்றாக புதிய நாடாளுமன்றம் கட்ட 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய நாடாளுமன்றத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து, செங்கோலை லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே நிறுவினார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு : முன்னதாக, இந்தியாவின் முதல் குடிமகளான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தான் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், மத்திய அரசு பிரதமர் மோடி தான் திறந்து வைப்பார் என உறுதியாக இருந்ததால், எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணித்தன.
இந்நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் கட்டிட வடிவமைப்பை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ஆர்ஜேடி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஒருபுறம் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மறுபுறம் சவப்பெட்டி ஒன்றின் படத்தைப் பகிர்ந்து, "இது என்ன?" என ஒரு ட்வீட்டை வெளியிட்டது.
சவப்பெட்டி உடன் ஒப்பீடு : புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் வடிவமைப்பு சவப்பெட்டியைப் போல இருப்பதாக ஆர்ஜேடி அந்த ட்வீட்டில் விமர்சித்திருந்தது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த ஆர்.ஜே.டி இவ்வாறு விமர்சித்திருப்பது பாஜகவினரை கொந்தளிக்கச் செய்துள்ளது.
பாஜக தலைவர்கள் பலரும் ஆர்ஜேடிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆர்ஜேடியின் இந்த ட்வீட்டை "அருவருப்பானது" என்று விமர்சித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, "ஆர்ஜேடியின் அரசியலின் சவப்பெட்டியில் இது இறுதி ஆணியாக இருக்கும்." என பதிலடி கொடுத்துள்ளார்.
ये क्या है? pic.twitter.com/9NF9iSqh4L
— Rashtriya Janata Dal (@RJDforIndia) May 28, 2023
சவப்பெட்டியே உங்களுக்குத்தான் : மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, "நாட்டு மக்கள் உங்களை 2024ல் ஒரே சவப்பெட்டியில் புதைப்பார்கள், ஜனநாயகத்தின் புதிய கோவிலுக்குள் நுழைய உங்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். நாடாளுமன்ற கட்டிடம் நாட்டுக்கும், சவப்பெட்டி உங்களுக்கும் சொந்தம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
"புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு பேசியவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும், நாடாளுமன்றம் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படும் நல்ல நாளில் அதனை அவமதித்திருக்கிறது ஆர்ஜேடி" என்று பாஜக தலைவர் சுஷில் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications