அமலுக்கு வந்தது பாரதிய நியாய சன்ஹிதா! சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு! ரோட்டோரம் கடை போட்டாராம்!?
டெல்லி: ஜூலை ஒன்றாம் தேதியான இன்று மத்திய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்த நிலையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே சுமார் 150 ஆண்டுகளாக இந்தியாவின் நீதி மற்றும் காவல் துறையில் ஐபிசி (indian penal code) சிஆர்பிசி (Code of Criminal Procedure commonly called Criminal Procedure Code ) உள்ளிட்ட சட்டங்கள் அமலில் இருக்கின்றன.

இந்த நிலையில் நாடு முழுவதும் பலத்தை எதிர்ப்புகளுக்கு இடையே புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இன்று முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்தன.
இதன் காரணமாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததால் ஏற்கனவே நீதி மற்றும் காவல் துறையில் இருந்த ஐபிசி, சிஆர்பிசி உள்ளிட்ட மூன்று குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்தியன் பீனல் கோட் எனப்படும் ஐபிசி இந்திய தண்டனைச் சட்டத்திற்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, குற்றவியல் நடைமுறைச் சட்டம் அதாவது சிஆர்பிசிக்கு பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதாவும், இந்திய ஆதாரச் சட்டம் அதாவது இந்தியன் எவிடன்ஸ் ஆக்ட் 1872க்கு மாற்றாக பாரதிய சக்ஷா சன்ஹிதாவும் அமலுக்கு வந்துள்ளது.
தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவில் 531 பிரிவுகளில் ஏற்கனவே இருந்த 117 பிரிவுகள் மாற்றப்பட்டு புதிதாக ஒன்பது புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் 14 பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல இந்தியன் பீனல் கோடுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதாவில் ஏற்கனவே இருந்த 511 பிரிவுகளுக்கு பதிலாக தற்போது 358 பிரிவுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதில் 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. 4 குற்றங்களுக்கு சிறை தண்டனையும் 82 குற்றங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு இருக்கிறது.
25 குற்றங்களுக்கு கட்டாயமாக குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் எனவும் 6 கூட்டங்களில் சமூக சேவை செய்ய வேண்டும் என தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதே போல பாரதிய நியாய சன்ஹிதாவில் பாலியல் பலாத்காரம், கூட்டு பாலியல் பலாத்காரம், குழந்தைகளுக்கு எதிரான குற்றம், கொலை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு நிச்சயம் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இன்று அமலுக்கு வந்த புதிய குற்றவியல் நடைமுறை சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது இந்தியாவிலேயே முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய டெல்லியில் சாலையோர வியாபாரி மீது தான் இந்த முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது திங்கட்கிழமை அதிகாலை 12:15 மணிக்கு மத்திய டெல்லியில் சாலையோர வியாபாரி பொதுமக்களுக்கு இடையூறாக கடை அமைத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த பங்கஜ் குமார் என்ற நபர்,டெல்லி ரயில் நிலையம் அருகே நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவர் மீது புதிய குற்றவியல் கோட் பிரிவு 285ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த குற்றத்துக்கு, ஐயாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எஃப்ஐஆர் படி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு பாலத்தின் கீழ் பங்கஜ் தனது கடையை நேற்றிரவு நிறுத்தியதாகக் கூறுகிறது. அந்த நபர் தண்ணீர், பீடி, சிகரெட் விற்பனை செய்து வருவதால், பொதுமக்களுக்கு இடையூறாக இருந்ததால், கடையை சாலையில் இருந்து அகற்றுமாறு சப்-இன்ஸ்பெக்டர் பலமுறை கேட்டும், அவர் ஏற்கவில்லை. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இ-பிரமன் அப்ளிகேசனை பயன்படுத்தி வீடியோவை எடுத்து அதன் மூலம் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications