காவிரி மேட்டர்.. ஸ்டாலினுக்கு கைமேல் வெற்றி! உடனே ஓகே சொன்ன உச்சநீதிமன்றம்! எதிர்கட்சிகளுக்கு ஷாக்
டெல்லி: காவிரி விவகாரத்தில் அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மேற்கொண்டு உள்ள நடவடிக்கை ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அது என்ன வெற்றி? விரிவாக பார்ப்போம்.
காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 38 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கடந்த ஆகஸ்டு 11 ஆம் தேதி தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடக அரசு அதிகாரிகளோ காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை மதிக்காமல் தண்ணீரை திறக்க மறுத்தனர்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரில் 41 டி.எம்.சி பாக்கி வைத்திருக்கிறது. இந்த மாதத்தில் எஞ்சியுள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டி.எம்.சி வீதம் 24 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்ற சூழல் இருந்தது.
ஆகஸ்ட் இறுதி வரை கர்நாடகா 65 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு 10 டி.எம்.சி தண்ணீரை வழங்குவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்து இருந்தார்.
இதன் காரணமாக காவிரி பாசன மாவட்டங்கள், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பாக இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் வாதிடுகையில், "காவிரி மேலாண்மை வாரிய அறிவுறுத்தலின்படி ஆகஸ்டு மாதத்தில் தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பதற்காகவே இந்த அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரிக்க தனி அமர்வு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "நிச்சயமாக.. இன்றே காவிரி விவகாரம் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க அதற்கென புதிதாக தனி அமர்வு அமைப்போம்." என்றார். இந்த தனி அமர்வு காரணமாக காவிரி விவகாரம் தொடர்பான வழக்குகளில் விரைந்து தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசு மீது அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வைக்கும் பெரிய குற்றச்சாட்டு காவிரி விவகாரம்தான். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி வேறு அமைந்துவிட்டதால் அதன் கூட்டணியில் உள்ள திமுக அரசை கடுமையாகஅவர்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மேற்கொண்டு உள்ள நடவடிக்கை என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது. தனி அமர்வு அமைக்கப்படுவதன் காரணமாக முந்தைய உச்சநீதிமன்ற உத்தரவு, காவிரி மேலாண்மை வாரிய அறிவுறுத்தல்கள் கர்நாடக அரசு மீறும்போது அதற்கு எதிரான உடனடியாக உத்தரவை பெற முடியும்.












Click it and Unblock the Notifications