தோல்வி.. ராஜினாமா அறிவிப்பு! தோல்வி.. ராஜினாமா அறிவிப்பு! ரிப்பீட்டு.. காங்கிரஸ் எப்போதுதான் மாறும்?
டெல்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி சரிவுகளை சரி செய்ய வியூகம் வகுக்காமல் வழக்கம் போல ராஜினாமா நாடகங்களை அரங்கேற்றுவதால் அம்மஞ்சல்லி பைசாவுக்கும் பயனில்லை என்பது மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, உ.பி, மணிப்பூர் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சி தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்தது. ஆளும் கட்சியாக கோலோச்சிய காங்கிரசால் வெறும் 18 இடங்கள் (மொத்தம் 117)தான் பெற முடிந்தது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இதே பஞ்சாப்பில் 77 இடங்களில் வென்றது காங்கிரஸ். பஞ்சாப்பில் காங்கிரஸ் படுதோல்வி அடைய காரணமே உட்கட்சி பூசலை கட்சி மேலிடமே ஊக்குவித்து விளையாடியதுதான் என்பதை அனைவருமே அறிவர்.
அகங்காரத்தை தூக்கிப்போடுங்க.. ஒன்னாசேர்ந்து பாடுபடுவோம் - ட்விட்டரில் சீறிய காங்கிரஸ் தலைவர்
உ.பி. பரிதாபம்
உத்தரப்பிரதேச மாநிலம் காங்கிரஸ், நேரு குடும்பத்தின் கோட்டை என்றெல்லாம் எழுதப்பட்ட பேசம் காலம் ஒன்று இருந்தது. இப்போது நேரு குடும்பத்துக்கு செல்வாக்கு இருப்பதாக நம்பப்பட்ட அமேதி, ரேபரேலி பிராந்தியத்தில் 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இத்தேர்தலில் 399 இடங்களில் (மொத்தம் 403 இடங்கள்) காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால் 387 இடங்களில் டெபாசிட்டையே பறிகொடுத்திருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் 2 இடங்களில்தான் வென்றது. அதன் வாக்கு சதவீதமும் 2.4%. 33 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய லோக் தள் கட்சி கூட 2.9% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2017 தேர்தலில் 7 இடங்களில் வென்ற காங்கிரஸ் இம்முறை மிக மோசமான தோல்வியை தழுவி உள்ளது. இத்தனைக்கும் உ.பி. தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் சந்தித்தது. பிரியங்கா காந்திதான் படுதீவிரமான பிரசரம் மேற்கொண்டார். ஆனால் உ.பி. மக்களோ காங்கிரஸை, நேரு குடும்பத்து அரசியலை துளியும் ஏற்காமல் ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டனர். இனி காங்கிரஸ் உ.பி. மண்ணில் மீண்டு எழுவது என்பது ஆகக் கூடுமானவரை சாத்தியமே இல்லை என்றே கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் நிலைமை
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜகவில் ஏகப்பட்ட குழப்பங்கள், முதல்வர்கள் மாற்றங்கள் என நிகழ்ந்தன. இந்த குழப்பங்களே தங்களுக்கு சாதகமாகிவிடும்; ஆட்சி அதிகாரம் எளிதில் வந்துவிடும் என்கிற மிதப்பில் முதல்வர் நாற்காலிக்கு மல்லுக்கட்டினர் காங்கிரஸ் தலைவர்கள். அக்கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத், முதல்வர் நாற்காலிக்காக முட்டிப் பார்த்தார். ஆனால் அவரே தேர்தலில் தோற்றுப் போனது பரிதாபம். உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது.
செயற்குழு நாடகம்
கோவாவில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சியால் 11-ல்தான் வெல்ல முடிந்தது. கோவா, மணிப்பூரில் தமது கட்சித் தலைவர்கள் பிற கட்சிகளுக்கு தாவிய போது மேலிடத் தலைமை அவர்களைத் தடுக்க முடியாமல் மவுனித்துப் போனது. இதனால் மணிப்பூரில் மொத்தம் உள்ள 60 இடங்களில் வெறும் 3-ல்தான் காங்கிரஸ் வென்றது. இத்தனை படுவீழ்ச்சிக்குமே தலைமைப் பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டு களநிலவரங்களை கணிக்கவும் கவனிக்கவும் தவறியதுதான். இன்னமும் 20,30 ஆண்டுகளுக்கு முந்தைய மேலிட மனோபாவத்தை காங்கிரஸ் தலைமை கைவிடுவதாகவும் இல்லை.. மாற்றிக் கொள்ளவும் தயார் இல்லை என்பதைத்தான் நேற்றைய செயற்குழு நாடகங்கள் வெளிப்படுத்துகின்றன.
ராஜினாமா நாடகம்
2019 லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த போது கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பின்னர் சோனியா காந்தி இடைக்கால தலைவரானார். இன்னமும் அக்கட்சிக்கு நிரந்தர தலைவரும் இல்லை. ஏற்கனவே கட்சி கட்டமைப்பில் அடிப்படை மாற்றங்களை செய்தாக வேண்டும் என்று 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் முன்வைத்த காரணங்களை அலசி ஆராயாமல் பாஜகவின் பி டீம் என முத்திரை குத்தி ஓரம்கட்டித்தான் வைத்தது தலைமை. இப்போதைய நிலையில் காங்கிரஸில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒன்றிரண்டு 2-ம் கட்ட தலைவர்கள்தான் இருக்கின்றனர். இவர்களால் அனைத்து மாநிலங்களிலும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும் முடியாது.ஆகையால் நேற்று செயற்குழுவைக் கூட்டி குடும்பத்தோடு ராஜினாமா செய்கிறோம் என அனுதாபத்தை தேடிக் கொள்கிற போக்கை கைவிட்டு ஆக்கப்பூர்வமாக ஆகக் கூடிய பணிகளை முன்னெடுப்பு செய்தால்தான் இதர மாநிலங்களிலாவது காங்கிரஸுக்கு கவுரவமான இடங்களைப் பெற முடியும்.ஒவ்வொருமுறையும், ராஜினாமா செய்கிறேன் என தலைமை அறிவிப்பதும், வேண்டாம் என்று நிர்வாகிகள் சொல்வதும், பிறகு சோனியா காந்தியே தலைவராக தொடருவதும் தொடர் கதையாகிறது. இது பாஜக தலைவர்களால் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.