'ஆப்கன் நிலை..உன்னிப்பாக கவனிக்கிறோம்.. இந்தியர்களை மீட்பதே ஒரே நோக்கம்..' அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
டெல்லி: ஆப்கானிஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அங்குள்ள இந்தியர்களைப் பத்திரமாகத் தாயகம் அழைத்து வருவதே முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
Recommended Video
ஆப்கனாஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, கடந்த சில வாரங்களாகவே அங்கு உள்நாட்டுப் போர் நிலவியது. ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.
பல பகுதிகளில் தாலிபான் தாக்குதலுக்கு எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆப்கன் வீரர்கள் சரணடைந்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் ஆப்கன் வெறும் ஒரு சில வாரங்களிலேயே தாலிபான்கள் கைகளுக்குச் சென்றது.

ஆப்கன் நிலை
இதையடுத்து இப்போது அங்கு நிச்சயமற்ற ஒரு சூழல் நிலவுவதால் பல்வேறு நாடுகளும் ஆப்கனில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இருப்பினும், தாலிபான்களுக்கு அஞ்சி, அங்குள்ள பல ஆயிரம் ஆப்கன் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர். இதனால் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல நூறு இந்தியர்கள் அங்கு இருப்பதால், அவர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

எஸ் ஜெய்சங்கர்
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், "ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான ஒரு சூழல் விரைவில் உருவாக வேண்டும். அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

நேரடி பதில் இல்லை
தாலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர் நேரடியாகப் பதிலளிக்காமல், "இந்த நேரத்தில், அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருகிறோம், தாலிபான்கள் ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். எனவே, இங்கிருந்து தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார். அதேபோல அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வருவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இருப்பினும், என்ன மாதிரியான நடவடிக்கை என அவர் விளக்கவில்லை.

இந்தியாவின் முதலீடு
அதேபோல ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா சுமார் 3 பில்லியின் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ள நிலையில், அது தொடருமா என்று கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், " நீங்கள் முதலீடு என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, இந்தியாவுக்கும் ஆப்கனுக்கும் வரலாற்று உறவை உள்ளதை அது உணர்த்துகிறது. ஆப்கானிஸ்தான் மக்களுடன் எங்களின் உறவு தொடர்கிறது. இது வரும் காலத்திலும் தொடரும் என்றே நான் நினைக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டார்.

தீவிர ஆலோசனை
முன்னதாக ஆப்கன் நிலை குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் உட்பட ஐநா சபையின் முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விவாதித்தார். ஆப்கனில் நிலைமை நிச்சயமற்று இருப்பதால், கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டாவது முறையாக ஆப்கன் நிலை குறித்து ஐநா சபையில் விவாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆப்கன் விவகாரத்தில் ஐநா சபை என்ன நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்பது இன்னும் ஓரிரு வாரத்தில் தெரியவரும்.

இந்திய நடவடிக்கை
அங்கு நிலைமை மிக மோசமாக உள்ளதால், கடந்த செவ்வாய்க்கிழமை தான், ஆப்கனுக்கான இந்தியா தூதர், அதிகாரிகள் மற்றும் அங்குச் சிக்கியிருந்த சில இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். அதேநேரம் இன்னும் பல நூறு இந்தியர்கள் அங்குள்ளதால், அவர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளிலும் இந்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான விமானங்களை அனுப்பி, அதன் மூலம் ஆப்கனிலுள்ள இந்தியர்களை அழைத்து வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெறும் சில வாரங்களில்
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க இருந்த வரை தாலிபான்கள் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருந்தது. ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன் அதிபர் பைடன் உத்தரவின்படி ஆப்கனில் இருந்த அமெரிக்கப் படைகள் படிப்படியாக அங்கிருந்து வெளியேறினர். இதற்காகவே காத்திருந்த தாலிபான்கள் மின்னல் வேகத்தில் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தினர். இதனால் வெறும் சில வாரங்களிலேயே ஆப்கன் அரசைத் தாலிபான்களால் கைப்பற்ற முடிந்தது. ஆப்கன் அதிபராக இருந்த அஸ்ரப் கானி தற்போது ஐக்கிய அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.












Click it and Unblock the Notifications