ஷேக் ஹசீனா ஆட்சியே வங்கதேசத்தின் பொற்காலம் என இதே மக்கள் விரைவில் சொல்வார்கள்.. மகன் பேட்டி!
டெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீணா, அமெரிக்கா அல்லது பிரிட்டனுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அதனை மறுத்துள்ளார் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய். ஷேக் ஹசீனாவின் ஆட்சி வங்கதேசத்தின் பொற்காலம் என்று மக்கள் விரைவில் கூறத் தொடங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நடந்த போராட்டத்தின் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கடந்த சில நாட்களுக்கு முன் உச்சக்கட்டத்தை எட்டியது. போராட்டக்காரர்கள் அனைவரும் தலைநகர் தாகாவை நோக்கி குவிய அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ராணுவத்தின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து பிரதமர் பதவியை உதறினார் ஷேக் ஹசீனா.

உடனடியாக வங்கதேசத்தில் இருந்து தப்பிய ஷேக் ஹசீனா, இந்தியாவுக்கு வந்தடைந்தார். அவர் டெல்லி பகுதியில் ஒரு ரகசிய இடத்தில் இந்திய அரசின் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து அமெரிக்கா அல்லது பிரிட்டனில் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எனினும், இந்திய அரசு தரப்போ, ஷேக் ஹசீனா தரப்போ இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில், எங்கு செல்வது என்பது குறித்து தனது அம்மா ஷேக் ஹசீனா இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த சஜீப் வசேத் ஜாய், "வங்கதேசத்தின் பிரதமராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் எனது அம்மா. அவரும் அவரது குடும்பத்தினரும் யாருக்காக இவ்வளவு செய்தார்களோ, அந்த நபர்களே தாக்குதலை நடத்துவார்கள் என்றும், அதன் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவரால் நம்ப முடியவில்லை. அவர் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்" எனத் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா அல்லது பிரிட்டனில் தஞ்சமடைய ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த சஜீப் வசேத் ஜாய், "இதெல்லாம் வதந்திகள். அவர் இன்னும் அது குறித்து முடிவு எடுக்கவில்லை. அவர் டெல்லியில் சிறிது காலம் தங்கப் போகிறார். எனது சகோதரி எனது அம்மாவுடன் இருக்கிறார். எனவே அவர் தனியாக இல்லை. எனது அம்மா வங்கதேசத்திலிருந்து வெளியேற விரும்பாததால் நான் மிகவும் கவலைப்பட்டேன். நாங்கள் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது." என தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேற ராணுவமோ அல்லது வேறு நபர்கள் காலக்கெடு நிர்ணயித்தார்களா என்ற கேள்விக்கு, "அத்தகைய காலக்கெடுவை யாரும் விதிக்கவில்லை. ஆனால் எதிர்ப்பாளர்கள் பிரதமர் இல்லத்தை அடைவார்கள் என்பது தொடர்பாக ஒரு நேர மதிப்பீடு இருந்தது. எனினும், காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், இந்த காலக்கெடுவிற்குள் அவர் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அதன் பிறகு வெளியேறி இருக்க முடியாது என்பது உண்மை" எனத் தெரிவித்தார்.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முஹமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராக செயல்பட உள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஜாய், "அதில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. அவர் எப்படி நாட்டை வழிநடத்துகிறார் என்பதைப் பார்க்க விரும்புகிறேன். ஒரு நாட்டை வழிநடத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. சிரியாவைப் போன்றே நிலைமை உள்ளது. நாடு எப்படி முன்னேறும் என்று எனக்குத் தெரியவில்லை. வங்கதேசத்தின் நிலைமை பாகிஸ்தானைப் போல இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஷேக் ஹசீனாவின் ஆட்சி வங்கதேசத்தின் பொற்காலம் என்று மக்கள் விரைவில் கூறத் தொடங்குவார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications