பரிந்துரைத்த அதிகாரிகள் மீதே தவறு இல்லை எனில் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படிதவறு? மன்மோகன்சிங்
Recommended Video
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பரிந்துரைத்த அரசு அதிகாரிகள் மீது எந்த தவறும் இல்லை எனில் அந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து போட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும்? என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக அன்னிய முதலீடு பெற்றுக் கொடுத்தார் சிதம்பரம் என்பது குற்றச்சாட்டு. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திஹார் சிறையில் அடைத்துள்ளது.

இவ்வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்துள்ளார். திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திஹார் சிறையில் சிதம்பரத்தை நேற்று சந்தித்து பேசினர். இச்சந்திப்பு குறித்து ட்விட்டர் பக்கத்தில் சிதம்பரம் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன்சிங் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எமது நண்பர் ப.சிதம்பரம் நீண்டநாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் நீதிமன்றம் நியாயமான தீர்ப்பு வழங்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நமது அரசு விதிகளின்படி எந்த ஒரு தனிநபரும் எந்த முடிவையும் எடுத்துவிட முடியாது.
அதிகாரிகள் உள்ளிட்டோர் இணைந்து ஆலோசித்து பின்னர் முடிவுகள் எடுக்கப்படும். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கிலும் கூட அதிகாரிகள், அரசு செயலாளர்கள் மொத்தம் 6 பேர் கூட்டாக பரிந்துரைத்துள்ளனர். அந்த பரிந்துரைக்குத்தான் சிதம்பரம் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார். பரிந்துரைத்த அந்த அதிகாரிகளே தவறு செய்யவிலை எனில் ஒப்புதல் அளித்த அமைச்சர் மீது மட்டும் எப்படி குற்றம் சுமத்த முடியும்?
அதிகாரிகளின் பரிந்துரைகளை அங்கீகரிப்பதற்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க நேரிட்டால் ஒட்டுமொத்த அரசாங்க கட்டமைப்புமே சரிந்துவிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications