வங்கிக்கடன் மோசடியால் ரூ.41,000 கோடி இழப்பு.. ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்
டெல்லி: 2017-18ம் ஆண்டில் கடனை வாங்கிவிட்டு அதனை திருப்பிச் செலுத்தாத மோசடியாளர்களின் செயல்களால் வங்கிகளுக்கு 41 ஆயிரத்து 167 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கியானது அறிக்கை வழியாக சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. தவறான வரவு செலவு அறிக்கையை அளித்தல், அன்னியச் செலவானி பரிமாற்றத்தில் மோசடிகள், டெபாசிட் கணக்குகள் போன்றவற்றில் அதிகமான மோசடிகள் நடந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புள்ளிவிவரங்களில் மேலுகூறப்பட்டு இருப்பதாவது:
2017-18-ம் ஆண்டில் வங்கி மோசடி தொடர்பாக 5 ஆயிரத்து 917 வழக்குகள் பதிவாகின. இது 2016-17-ம் ஆண்டில் 5 ஆயிரத்து 76 வழக்குகளாக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. அதுவே 2013-14ம் ஆண்டில் ரூ.10,170 கோடியாக இருந்த வங்கி மோசடியின் அளவானது தற்போது 4 மடங்கு அதிகரித்து, 2017-18-ம் ஆண்டில் ரூ.41 ஆயிரத்து 167 கோடியாக உயர்ந்துவிட்டது.
சைபர் க்ரைம் தொடர்பான மோசடிகளில் மட்டும் வங்கிகளுக்கு 2017-18-ம் ஆண்டில் ரூ.109.6 கோடி இழப்பு ஏற்பட்டு, 2,059 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த 2016-17ம் ஆண்டில் 1,372 வழக்குகளாகவும், ரூ.42.30 கோடி அளவாகவும் இருந்துள்ளது.
பெரும்பாலும் ரூ.50 கோடி அதற்கு மேலான தொகையில்தான் 80 சதவீத மோசடி சம்பவங்கள் 2017-18-ம் ஆண்டில் நடந்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் 93 சதவீத மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளன.
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வாராக் கடன்களின் அளவு ரூ.10 லட்சத்து 39 ஆயிரத்து 700 கோடியாக உயர்ந்துவிட்டது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ்மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோரின் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications