பாஜகவின் கருவே ‘Fringe’ தான் -அமித்ஷா முதல் யோகியின் சர்ச்சை கருத்துக்களை லிஸ்டு போட்ட ராகுல் காந்தி
டெல்லி: பாஜகவின் கருவே Fringeதான் என ட்விட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்து இருக்கிறார்.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

வழக்குப்பதிவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து வட மாநிலங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதுகுறித்து மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, "நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பதிவு செய்வோம்." என்றார்.

கான்பூரில் கலவரம்
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களின் வீடுகள் புல்டோசரில் இடிக்கப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது.

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கத்தார்
குறிப்பாக அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அந்நாட்டுக்கான இந்திய தூதரிடம் விளக்கம் கேட்டது. இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அளித்த விளக்கத்தில், இவை கலகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான். இந்தியா அனைத்து மதங்களையும் மதிக்கிறது." என்று குறிப்பிட்டது. பாஜகவினரையே fringe element என வெளியுறவுத்துறை விமர்சித்தது சர்ச்சைக்கு உள்ளானது.
Recommended Video

ராகுல் காந்தி
இந்த நிலையில் ட்விட்டரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரை தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பட்டியலிட்ட ராகுல் காந்தி, "பாஜகவின் கருவே 'Fringe' தான்" என்று விமர்சித்து இருக்கிறார். அந்த பதிவில், வங்கதேசத்தில் குடியேறியவர்களை கரையான்கள் என்று அமித்ஷா சாடியது, பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியாது என்று யோகி ஆதித்யநாத் பேசியது, தேசதுரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தது, காந்தியை கொன்ற நாதுராம் கோட்ஷேவை பாஜகவை சேர்ந்த சாத்வி பிரக்யா தேசபக்தர் என்று பாராட்டியது போன்றவற்றை ராகுல் காந்தி தொகுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.












Click it and Unblock the Notifications