பகவத் கீதை, வீட்டு சாப்பாடு ஓகே.. கடைசி நொடியில் கெஜ்ரிவால் வைத்த மற்றொரு கோரிக்கை! என்ன தெரியுமா
டெல்லி: மதுபானக் கொள்கை வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ள நிலையில், இப்போது சிபிஐ தரப்பும் கெஜ்ரிவாலைக் கைது செய்துள்ளது. இதையடுத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த 3 நாட்கள் சிபிஐ காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2022 இறுதியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கை ஆம் ஆத்மிக்கு மிக பெரிய தலைவலியாக மாறியுள்ளது. அந்த மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்ட சில மாதங்களில் வாபஸ் பெறப்பட்டுவிட்ட போதிலும் இதில் பல ஆம் ஆத்மி தலைவர்கள் சிக்கி வருகிறார்கள்.

டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஏற்கனவே இந்த விவகாரத்தில் கடந்த ஓராண்டிற்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். இந்தச் சூழலில் தான் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவால்: கைது செய்யப்பட்ட போதிலும் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்து முதல்வராகச் செயல்பட்டு வரும் அவர், அங்கிருந்தபடியே உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார். அவர் ஜாமீன் கோரி தொடர்ந்து மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார். இடையில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், அதை நீட்டிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டதால் தேர்தல் நிறைவடைந்த உடன் அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அமலாக்கத் துறை அவரை கைது செய்திருந்த நிலையில், நேற்று சிபிஐ தரப்பும் கெஜ்ரிவாலைக் கைது செய்தது.
இதற்கிடையே மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற டெல்லி நீதிமன்றம் 3 நாள் சிபிஐ காவல் வழங்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ காவல் வழங்கி உத்தரவிட்டது.
சலுகைகள்: அப்போது சிபிஐ காவலுக்குச் செல்லும் போது சில சலுகைகள் வேண்டும் என்று கெஜ்ரிவால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. சிபிஐ காவலின் போது, கெஜ்ரிவால் தனது கண் கண்ணாடியை வைத்திருக்க அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைச் சாப்பிடவும், வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வரும் உணவைச் சாப்பிடவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
மேலும், பகவத் கீதையின் நகலை வைத்திருக்க அவர் அனுமதி கோரிய நிலையில், அதற்கும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், அவரது மனைவி மற்றும் உறவினர்களைத் தினமும் ஒரு மணி நேரம் சந்திக்கவும் கெஜ்ரிவாலுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
கடைசி கோரிக்கை: கெஜ்ரிவால் தரப்பில் மற்றொரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, தனக்குத் தேவையான பொருட்களின் பட்டியலில் தனது பெல்ட்டை குறிப்பிட மறந்துவிட்டதாகச் சிறப்பு நீதிபதி அமிதாப் ராவத்திடம் முதல்வர் தெரிவித்தார். பெல்ட்டை குறிப்பிட மறந்ததால் தனது பெல்ட் வழங்கப்படவில்லை என்றும் இதனால் திகார் சிறையில் நடக்கும் போது அசவுகரியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து இந்த கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
போலீஸ் காவல்: மதுபான கொள்கை விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ தரப்புக்கு மூன்று நாட்கள் கால அவகாசம் தரப்பட்டுள்ளது. மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு அவர், ஜூன் 29ம் தேதி இரவு 7 மணிக்கு கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கை சிபிஐ தரப்பும் விசாரித்து வரும் நிலையில், நேற்று புதன்கிழமை சிபிஐ தரப்பும் கெஜ்ரிவாலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications