பிரதமர் அலுவலகம் டூ ரிலையன்ஸ் வரை.. உள்ளே புகுந்த சீன ஹேக்கர்கள்? உஷார் ஆன இந்தியா!
டெல்லி: சமீபத்தில், சாஃப்ட்வேர் புராஜெட்களை சேமித்து வைக்க பயன்படும் கிட்ஹப் (GitHub) எனும் தளத்தில் வெளியாகியிருந்த சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதன் பின்னணியில் சீனாவின் உளவு நிறுவனங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்குமான உறவில் பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த விரிசலின் அளவு அதிகரித்தது. இப்படி இருக்கையில், இந்தியாவின் மிக முக்கிய தகவல்களை சீன உளவு நிறுவனங்கள் திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாஃப்வேர் புராஜெட்களை சேமித்து வைக்க பயன்படும் கிட்ஹப் (GitHub) எனும் தளத்தில் ஐசூன் (iSoon) நிறுவனத்தின் சில தகவல்கள் சமீபத்தில் லீக்காகி இருந்தன. இதுதான் இந்த சந்தேகத்தை எழுப்புள்ளது. காரணம் ஐசூன் என்பது சீன அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் ஒரு தகவல் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமாகும். இந்நிலையில் லீக் ஆகியுள்ள தகவல்கள், இந்த நிறுவனம், இந்தியாவின் பிரதமர் அலுவலகம் மட்டுமல்லாது ஏர் இந்தியா, ரிலைன்ஸ் நிறுவனங்களையும் குறிவைத்து தகவல் திருட்டில் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்துள்ளன.
கிட்ஹப்பில் தகவல் லீக் ஆனவுடன் சீனா பதற்றமடைந்திருக்கிறது. இது தொடர்பான உயர்மட்ட விசாரணைக்கும் அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லீக்கான தகவல்கள் வைத்து பார்க்கும்போது, இந்தியா மட்டுமல்லாது அமெரிக்காவின் நேட்டோ, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்க தகவல்கள், பல முக்கியமான தனியார் நிறுவனங்கள், சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தகவல்களும் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவை பொறுத்த அளவில் நிதி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தை ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இது தவிர EPFO, பிஎஸ்என்எல் மற்றும் அப்பல்லோ உள்ளிட்ட நிறுவனங்களையும் ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஏர் இந்தியாவின் பயணிகளின் தினசரி செக்-இன் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது.
இந்தியாவை தவிர, பாகிஸ்தான், நேபாளம், மியான்மர், மங்கோலியா, மலேசியா, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ், தாய்லாந்து, கஜகஸ்தான், துருக்கி, கம்போடியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய தகவல்களும் திருடப்பட்டிருக்கலாம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நேபாள நாட்டின் டெலிகாம், மங்கோலியாவின் நாடாளுமன்றம் மற்றும் அந்நாட்டு காவல் துறை தகவல்கள், பிரெஞ்சு பல்கலைக்கழகம் மற்றும் கஜகஸ்தானின் ஓய்வூதிய மேலாண்மை ஆணையம் ஆகியவற்றில் இருந்தும் பெரிய அளவிலான தரவுகள் திருடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்த எச்சரிக்கை உணர்வுடன் ஆசிய நாடுகள் இருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்தியா மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications