டெல்லி ஏஐ மாநாட்டில் சீனாவின் ரோபோட் நாய்.. என்ன நடந்தது? மன்னிப்பு கேட்ட பல்கலைக்கழகம்
டெல்லி: டெல்லியில் ஏஐ மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சீன தயாரிப்பு ரோபோட் நாய் காட்சிப்படுத்தப்பட்டது சர்ச்சையான நிலையில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் தான் அந்த பல்கலைக்கழகம மன்னிப்பு கோரியுள்ளதோடு சம்பவம் தொடர்பாக புதிய விளக்கம் அளித்துள்ளது.

டெல்லியின் பாரத் மண்டபத்தில் நம் நாட்டின் முதல் ஏஐ உச்சி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் 'இந்தியா AI எக்ஸ்போ 2026' எனும் கண்காட்சி நடத்தப்பட்டு இருந்தது. பிரதமர் மோடி தான் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
ஏஐ ரோபோட் நாய்
நம் நாட்டை சேர்ந்த ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட பல கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் அந்த வகையில் நொய்டாவில் செயல்பட்டு வரும்'கல்கோடியாஸ்' பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஏஐ ரோபோட் நாயை காட்சிப்படுத்தி இருந்தது. இதற்கு ‛ஓரியன்' என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
பேட்டியால் வந்த வினை
இதுதொடர்பாக கண்காட்சி அரங்கில் இருந்த ஒருவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‛‛நாங்கள் இங்கே ஓரியன் என்கிற ரோபோவை காட்சிப்படுத்தி உள்ளோம். இது எங்கள் பல்கலைக்கழகத்தின் 'சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்' குழுவினரால் முழுமையாக உருவாக்கப்பட்டது.
இது ஏஐ தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இதில் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்களை பின் தொடரவும், கட்டளையின்படி செயல்பட வைக்கவும் முடியும்'' என கூறியிருந்தார்.
சர்ச்சையை கிளப்பிய வீடியோ
இந்த வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில் சர்ச்சையை கிளப்பியது. சீனாவின் 'unitree' எனும் நிறுவனம் பெயர் 'Unitree GO2' என்ற பெயரில் இந்த ரோபாட் நாயை தயாரித்து வருகிறது. இதனால் பலரும் இது சீனாவின் தயாரிப்பாகும். சீனாவின் ரோபோட் நாய் ஆன்லைனில் கிடைக்கும். ரூ.2.3 லட்சம் கொடுத்து வாங்கலாம். மாணவர்கள் அதனை வாங்கி கண்காட்சியில் காட்சியப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். இது சர்ச்சையை கிளப்பியது.
மன்னிப்பு
இதையடுத்து கண்காட்சியில் இருந்து கல்கோடியாஸ் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தான் பல்கலைக்கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛ஏஐ உச்சிமாநாட்டில் சமீபத்தில் நடந்த குழப்பத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். கண்காட்சி அரங்கத்தில் இருந்த எங்கள் பிரதிநிதி தவறான தகவலை கூறிவிட்டார். அவருக்கு சம்பந்தப்பட்ட ரோபோட் நாயின் தயாரிப்பு, தொழில்நுட்பம் பற்றி தெரியாது.
உண்மைக்கு மாறாக...
பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் கேமரா முன்பு பேசும் ஆர்வத்தில் உண்மைக்கு மாறான கருத்தை தெரிவித்துவிள்ளார். இந்த புதுமைகள் சார்ந்த கண்டுபிடிப்பு விஷயத்தில் பல்கலைழக்கத்துக்கு எந்த உள்நோக்கமம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
கல்வி, ஒருமைப்பாடு, வெளிப்படை தன்மை மற்றும் பொறுப்பான பிரதிநிதித்துவம் வழங்குவதில் கல்கேடாியாஸ் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது. நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களின் உணர்வுகளை புரிந்து நாங்கள் கண்காட்சியை விட்டு வெளியேறி உள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications