மீண்டும் சிலிண்டர் தட்டுப்பாடு? ட்விஸ்ட் வைக்கும் கேஸ் நிறுவனங்கள்.. மிக முக்கிய முடிவு!
டெல்லி: வளைகுடாவில் நடக்கும் போரால் இந்தியாவில் பாதிப்புகள் தொடர்ந்து வருகிறது. இதனால் பெட்ரோல்- டீசல் விலை உயரலாம் என்ற தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்பிஜி கனெக்ஷனிலும் சிக்கல் நீடிக்கிறது. இதற்கிடையே புதிய எல்பிஜி கனெக்ஷன் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பித்த வளைகுடா மோதல் இப்போது தற்காலிகமாக மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும், முழுமையாக முடிவுக்கு வரவில்லை. எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் போர் வெடிக்கும் என்ற சூழலே இருக்கிறது. அமெரிக்கா ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதால் அங்குப் பதற்றம் முடிவுக்கு வரவில்லை.

மேற்கு ஆசியா
இதனால் நிலைமை முழுமையாகச் சரியாகவில்லையாம். மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான நீடித்து வரும் போர்ச் சூழல், இப்போது நேரடியாக இந்தியச் சமையலறைகளுக்குள் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், இந்தியாவில் புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குத் தேவையான சமையல் எரிவாயுவில் சுமார் 60% முதல் 65% வரை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி, ஈரான் அருகே உள்ள மிக முக்கியமான கடல் வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவுக்கு வருகிறது. தற்போது அங்கு நிலவும் போர் பதற்றத்தால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இறக்குமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேஸ் சிக்கல்
இதனால் கடந்த ஒரு மாத காலமாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் புதிய காஸ் இணைப்புகள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளன. தட்டுப்பாடான சூழலில், ஏற்கனவே காஸ் இணைப்பு வைத்திருக்கும் பழைய நுகர்வோருக்குத் தடையின்றி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் தற்போதைய இலக்காக உள்ளது. இதனால் புதிய கனெக்ஷன் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும், சில பகுதிகளில் ஏற்கனவே இணைப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இரண்டாவது சிலிண்டர் வழங்கும் முறையையும் விநியோகஸ்தர்கள் நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு நம்பிக்கை
நிலைமை மோசமாக இருந்தாலும் கூட, தற்போதைய நுகர்வோருக்குத் தேவையான கேஸ் கையிருப்பில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் பீதியடைந்து ஒரே நேரத்தில் சிலிண்டர்களைப் புக்கிங் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டை விட வீட்டு உபயோகத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
உலகம் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் போர், நம் வீட்டு அடுப்பை அணைக்கக் கூடிய வல்லமை கொண்டது என்பதை இந்த எரிவாயு தட்டுப்பாடு உணர்த்துகிறது. ஹார்முஸ் ஜலசந்தி என்பது உலக எரிசக்தி விநியோகத்தின் தொண்டை போன்றது; அங்கே ஏற்படும் ஒரு சிறு அடைப்பு இந்தியப் பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்யும். தற்போது வரை புதிய கனெக்ஷன் அல்லது இரண்டாவது கனெக்ஷன் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்பதற்குத் துல்லியமான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை.
வளைகுடா மோதல்
வளைகுடா மோதலை பொறுத்தவரை நேரடி தாக்குதல்கள் நின்றுவிட்டன. இருப்பினும், ஹார்முஸில் பதற்றம் தொடர்கிறது. ஒரு பக்கம் ஈரானுக்கு எந்தவொரு கப்பலும் நெருங்காமல் இருக்கும் வகையில் அமெரிக்கப் படைகள் மறுத்துள்ளன. இன்னொரு பக்கம் ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்கள் ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications