யார்ரா அந்த பையன்..நான்தான் அந்த பையன்! அடிகள் தான் எங்களை வலிமையாக்குகிறது! ஓபனாய் பேசிய கெளதம் அதானி
டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை, சோலார் மின்சார கொள்முதலுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கியதால் கௌதம் அதானி நிறுவனங்களின் பங்குகள் வெகுவாக சரிந்தன. இந்த நிலையில் தங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் தங்களை இன்னும் வலிமையாக மாற்றுகிறது என கௌதம் அதானி முதன்முறையாக தங்கள் நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசி இருக்கிறார்.
உலக அளவில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக விளங்குகிறார் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி. இந்தியாவைப் பொறுத்தவரை அம்பானி குடும்பங்களின் ஆதிக்கத்தை தாண்டி உலக அளவில் மிகப் பெரும் தொழிலதிபர்களாக உருவெடுத்த கௌதம் அதானி முக்கியத்துவம் வாய்ந்தவர்.

கடந்த 10 ஆண்டுகளில் இவரது நிறுவனத்தின் வளர்ச்சி எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அவர் கால் வைக்காத துறைகளே கிடையாது எனும் அளவுக்கு தொழில் சாம்ராஜ்யம் விளங்குகிறது.
குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி மூலம் சோலார் மின் உற்பத்தியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது, இந்த நிலையில் சோலார் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு சுமார் 2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கா ஃபெடரல் நீதிமன்றத்தின் இந்த குற்றச்சாட்டு காரணமாக உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பல மாநிலங்கள் அதானியின் மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. இதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், அதானியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த குற்றச்சாட்டு அதானிக்கு எதிராக வரும் இரண்டாவது குற்றச்சாட்டு ஆகும். ஏற்கனவே பங்குமுறைகேட்டில் ஈடுபட்டதாக அதானியின் நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டியது.
இதை அடுத்து அதானியின் நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போதும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், முதன்முறையாக தங்கள் நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் கௌதம் அதானி. இது தொடர்பாக பேசி உள்ள அவர்,"அதானி குழும நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு இணக்கமாக செயல்படுவோம் என உறுதி அளித்து இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி விதிகளை மீறி செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டோம். இது போன்ற பிரச்சனைகளையும், சவால்களையும், குற்றச்சாட்டுகளையும் நாங்கள் எதிர்கொள்வது ஒன்றும் முதல் முறை கிடையாது. எங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் எங்களை வலிமையாக்குகிறது. ஒவ்வொரு தடைக்கல்லும் எங்களது அதானி குடும்பம் மீண்டும் முன்னேறுவதற்கான படிக்கற்களாக மாறி உள்ளன.
தற்போதைய சூழலில் உண்மையை விட பொய் அதிகமாக பரவுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். உலகத்தரத்தில் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணைந்து நடப்போம் என்ற முழுமையான உறுதிபாட்டை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன்" என கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications