இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்பு... யார் இவர்... முழுவிபரம்
டெல்லி: இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக மனோஜ் பாண்டே இன்று பொறுப்பேற்று கொண்டார். எம்எம் நரவனே ஓய்வு பெற்ற நிலையில் அவர் மனோஜ் பாண்டேவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
இந்தியாவின் 28 வது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். இந்த பொறுப்பில் இவர் கடந்த 28 மாதங்களாக திறமையாக செயல்பட்டு வந்தார்.
3 அமைச்சர்கள்.. அப்பறம் உதயநிதி.. பக்கா பிளானோடு குதித்த திமுக! வடக்கிலிருந்து வந்த டாப்
இவரது பதவிக்காலம் இன்றுடன் முடிடைகிறது. இவர் ஓய்வு பெறுவதையொட்டி புதிய ராணுவ தளபதி தேர்வு சமீபத்தில் நடந்தது.
புதிய தளபதி பொறுப்பேற்பு
அதன்படி இந்திய ராணுவத்தின் துணை தளபதியான ஜெனரல் மனோஜ் பாண்டே தேர்வானார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் 18 ல் அறிவிக்கப்பட்டது. எம்எம் நரவனே இன்று ஓய்வு பெறுவதால் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் பாண்டே பொறுப்பேற்று கொண்டார். எம்எம் நரவனே அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
யார் இந்த மனோஜ் பாண்டே
மனோஜ் பாண்டே 1962 மே 6ம் தேதி பிறந்தார். 1982ல் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்தார். ராணுவத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றி இந்த உயர் பதவியை அடைந்துள்ளார். இதன்மூலம் ராணுவத்தில் பொறியியல் பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மனோஜ் பாண்டே இந்திய ராணுவ பிரிவு, லடாக், பாகிஸ்தான் எல்லை, அந்தமான்-நிகோபார் பிராந்திய தளபதியாகவும் பணி செய்துள்ளார். மேலும் பிப்ரவரி மாதம் தான் ராணுவ துணை தளபதியாக பொறுப்பேற்றார். அடுத்த 2 மாதத்தில் இந்திய ராணுவத்தின் 29வது தளபதியாக பொறுப்பேற்று உள்ளார். இவர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பொறுப்பில் செயல்பட வாய்ப்புள்ளது. இவருக்கு பதில் ராணுவ துணை தளபதியாக பிஎஸ் ராஜூ நியமிக்கப்பட்டுள்ளாா்.
சவால்கள் என்னென்ன
ராணுவ தளபதியான மனோஜ் பாண்டே முன்பு பல்வேறு சவால்கள் உள்ளன. இந்திய -சீன எல்லை, இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இந்திய ராணுவம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இதை கட்டுப்படுத்த வேண்டும். அதேசமயத்தில் எதிர் நாட்டினருக்கும் உரிய நேரத்தில் பதிலடி கொடுக்க வேண்டும். மேலும் முப்படைகளுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் கடற்படை, விமானப்படை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.
எதிர்கால முயற்சிக்கு வாழ்த்து
இதற்கிடையே எம்எம் நரவனே பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், " 42 ஆண்டுகள் நாட்டுக்காக சேவையாற்றி இன்று ஓய்வுபெறும் ராணுவ தளபதி எம்எம் நரவனே உடனான அற்புதமான சந்திப்பு. ராணுவத் தலைவராக அவர் ஆற்றிய பங்களிப்புகள் நாட்டின் பாதுகாப்புத் திறன்களையும் தயார்நிலையையும் வலுப்படுத்தியுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
குடியரசு தலைவருடன் சந்திப்பு
இதையடுத்து, ஓய்வுப் பெற்ற ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே மற்றும் அவரது மனைவி வீணா நரவனே ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோரை ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினர். பிறகு சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
முப்படைகளின் தலைமை தளபதி வாய்ப்பு?
தற்போது தனது பதவியில் இருந்து ஓய்வு பெரும் நரவனேவை மத்திய அரசு முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் என 14 பேருடன் ராணுவ ஹெலிகாப்டரில் சென்றார். இது விபத்துக்குள்ளான நிலையில் அனைவரும் பலியாகினர். முப்படைகளின் முதல் தலைமை தளபதியான பிபின் ராவத் இறந்த நிலையில் அந்த பதவி காலியாக உள்ளது. இந்நிலையில் தான் இந்த பதவியில் ஓய்வு பெறும் ராணுவ தளபதி நரவானே நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.