சர்க்கரை அட்டை வைத்திருப்போருக்கு நிம்மதி.. 5.80 கோடி போலி ரேஷன் கார்டு அம்பலம்: மத்திய அரசு அதிரடி
டெல்லி: ரேஷன் எனப்படும் பொது வினியோக முறையில், டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளால், 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு, ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை போன்ற தானியங்களை இலவசமாக வழங்குவதற்காக மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் வாயிலாக மாநில அரசுக்கு அனுப்பி வருகிறது. இதில், ஆண்டுக்கு 5.24 கோடி டன் அரிசியும், 1.90 கோடி டன் கோதுமையும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆனால் இந்த அரிசி, கோதுமையில், 28 சதவீதம் பொதுமக்களுக்கு போய் சேருவதில்லையாம்.. ஒரு வருட காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அனுப்பிவைக்கப்பட்ட 5.24 கோடி டன் அரிசியில், 3.57 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு சென்றிருக்கிறது. 32 சதவீத அரிசி பயனாளிகளுக்கு சென்றடையவில்லை, 1.90 கோடி டன் கோதுமை அனுப்பப்பட்டதில், வெறும் 1.6 கோடி டன் மட்டுமே பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது, இதில், 15 சதவீதம் மடைமாற்றப்பட்டுள்ளது என்றெல்லாம் அந்த ஆய்வு கூறுகிறது.
நடைமுறைகள்: இதனால், இந்த ஒரு வருடத்தில் மட்டும், மத்திய அரசுக்கு 69,109 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும், ரேஷன் நடைமுறைகள் ஓரளவு டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால்தான், ரேஷன் பொருட்கள் மோசடி வெகுவாக குறைந்துள்ளது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், ரேஷனை, டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளால், 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது.. மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
பலன்கள்: அதில், "ரேஷன் நடைமுறையை டிஜிட்டல் மயமாக்குவது, வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவது, வினியோக நடைமுறையை திறம்பட கையாள்வது போன்றவற்றில் மத்திய அரசு தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் வாயிலாக, ரேஷன் பலன்கள் உரியவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் 20.4 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதன் வாயிலாக, 80.6 கோடி பேர் பயன்களை பெற்று வருகிறார்கள். இதில், 99.8 சதவீத ரேஷன் கார்டுகள் இகேஒய்சி எனப்படும் மின்னணு தகவல் முறையில் சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும், 98.7 சதவீத பயனாளர்கள், ஆதார் அடிப்படையில் சரிபார்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், 5.80 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன.
பிஓஎஸ்: நாடு முழுதும், 5.33 லட்சம் பிஓஎஸ் எனப்படும் பாயின்ட் ஆப் சேல்ஸ் என்றழைக்கப்படும் கருவியின் வாயிலாக, ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக, தகுதி வாய்ந்த நபர்களுக்கே ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications