நாடும் மக்களும் மீண்டும் மீண்டும் பேரழிவை சந்திக்க முடியாது - மத்திய அரசுக்கு ராகுல் வார்னிங்
டெல்லி: இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில், மத்திய அரசின் மோசமான தடுப்பூசி உத்தி, பேரழிவு தரும் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். மீண்டும் மீண்டும் கொரோனாவால் நாடும், நாட்டு மக்களும் பேரழிவை சந்திக்க முடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அலை இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தினசரி 3லட்சத்திற்கும் பாதிப்புகள் பதிவாகி வருகிறது. தினசரி 3 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி வருவதாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நிலைமை அதைவிட அதிகமாகவே இருக்கும் என்ற அச்சம் உள்ளது.
இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் அதனை கட்டுப்படுத்த ஒரே தீர்வு என்று நம்பிக்கை எழுந்துள்ளது. அதன்படி உலகின் பல்வேறு நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி அளிப்பதை விரைவுபடுத்தி உள்ளன. இந்திய அரசும் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தற்போது விரைவு படுத்தி உள்ளது. எனினும் உற்பத்தி செய்த தடுப்பூசிகளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டதாக மத்திய அரசு மீது புகார் உள்ளது.
தடுப்பூசி பற்றாக்குறை பல மாநிலங்களில் உள்ளது. 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்ளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு 15 நாட்கள் ஆகியும் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்த முடியவில்லை. இதற்கு தடுப்பூசி பற்றாக்குறையே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
" கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டு மத்திய அரசு தொடந்து தனது செயல்களுக்கு மார்தட்டிக் கொண்டு, பெருமையடிக்கிறது. மத்திய அரசு தனது கடமைகளை, பணிகளை முறையாகச் செயத்திருந்தால், இந்தியாவுக்கு இந்தநிலை வந்திருக்குமா" என்று கடந்த வாரம் விமர்சித்திருந்தார்,. தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமர் நரேந்திர மோடியையும் காணவில்லை என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விமர்சித்தார் ராகுல் காந்தி,
இந்நிலையில் இன்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில், மத்திய அரசின் மோசமான தடுப்பூசி உத்தி, பேரழிவு தரும் மூன்றாவது அலையை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். மீண்டும் மீண்டும் கொரோனாவால் நாடும், நாட்டு மக்களும் பேரழிவை சந்திக்க முடியாது என்று வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உடனடியாக தேவை சிறப்பான தடுப்பூசி கொள்கை என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.