5 ஆண்டுகளில் பவுனுக்கு 31,000 உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு விலை சரியுமா?
டெல்லி: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பவுனுக்கு ரூ.31 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், பவுனுக்கு ரூபாய் 3 ஆயிரம் வரை தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் இன்றைய பட்ஜெட் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் தங்கம் விலை உயர்ந்து வருவதால், இன்றைய மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு இறக்குமதி வரி குறைக்கப்பட்டு விலை சரியுமா? என எதிர்ப்பார்ப்பு எற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்த நிலையில், ஒரு மாதத்துக்கு பின் கடந்த ஆண்டு மே மாதம் 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.55 ஆயிரத்தையும் கடந்தது. மேலும் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்து அறிவிப்பு வெளியானது.
விண்ணை முட்டும் தங்கம் விலை
இந்த அறிவிப்பு வெளியான அன்றைய தினமே பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் விலை உயரத்தொடங்கியது. இடையில் அவ்வப்பொது விலை சரிந்தாலும் மொத்தமாக பார்த்தால் அதிகரித்துக்கொண்டேதான் சென்றது.
கடந்த மாதம் 22-ந்தேதி ஒரு பவுன் 60 ஆயிரத்தை தொட்டு அதிர வைத்தது. இந்த நிலையில், நேற்று ரூ.61 ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் பதிவு செய்து இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிராமுக்கு ரூ.580-ம், பவுனுக்கு ரூ.4 ஆயிரத்து 640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
6 சதவிகிதமாக குறைப்பு
பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், நிதி உள்ளிட்ட துறைகள் இறங்குமுகத்தில் இருப்பதால், தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியதே விலை உயர்வுக்கு காரணமாக சொல்லபடுகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பட்ஜெட் அறிவிப்பின் போது நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் போது இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை அன்றைய தினம் குறைந்தது.
ரூ. 3 ஆயிரம் குறைய வாய்ப்பு?
அதேபோல், இன்று அறிவிக்கப்பட உள்ள மத்திய பட்ஜெட்டிலும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதாவது 6 சதவீதமாக இருக்கும் இறக்குமதி வரி, 1 சதவீதத்துக்கு வர வாய்ப்பு இருக்கும் என்றும், அவ்வாறு குறையும் பட்சத்தில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரம் வரை குறையும் என்றும் வியாபாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
வியாபாரிகள் எதிர்பார்ப்பு படி இறக்குமதி வரி குறையுமா? என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
தங்கம் விலையை பொறுத்தவரை கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 3-ந்தேதி ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை தாண்டியது. தற்போது ஒரு பவுன் ரூ.61 ஆயிரத்து 840-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்படி பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பவுனுக்கு ரூ.31 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications