ஆயுஷின் 5 நிமிட யோகா பயிற்சி செயலி.. டவுன்லோடு செய்ய ஊழியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா செயலியை மத்திய அரசு ஊழியர்கள் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Y Break (yoga break) எனும் செயலியை ஆயுஷ் அமைச்சகமானது கடந்த 1ஆம் தேதி 6 அமைச்சர்கள் முன்னிலையில் மத்திய ஆயுஷ் துறையின் அமைச்சர் சர்வானந்த சோனேவால் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு மன அழுத்தத்துக்கு ஆளாகி வருவது அனைவரும் அறிந்ததே. அத்துடன் பணியின் தன்மையால் உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். மற்ற துறைகளில் உள்ள ஊழியர்களும் கூட இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
இதை கருத்தில் கொண்டே யோகா பிரேக் எனும் மொபைல் செயலியை அரசுக் கொண்டு வந்துள்ளது. இதில் 5 நிமிட பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன. யோகாசனங்கள், பிராணயாமம், தியானம் உள்ளிட்டவை உள்ளன. அவற்றை பின்பற்றி மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம் என்றார்.

இதுகுறித்து இரு தினங்களுக்கு முன்னர் மத்திய பணியாளர் மற்றும் நலத் துறையினர் வெளியிட்ட அறிக்கையில், ஆயுஷ் அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒய் பிரேக் எனப்படும் யோகா செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து அமைச்சகங்களின் கீழ் உள்ள ஊழியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த செயலியின் பயன்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இது அனைத்து ஆன்ட்ராய்டு மொபைல்களில் உள்ள கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். கடந்த 2019ஆம் ஆண்டு நிபுணர் குழு மூலம் இந்த யோகா செயலிக்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. பின்னர் 6 முக்கிய மெட்ரோ நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் சோதனை ஓட்டமாக செயல்பட்டதில் அனைவரும் இந்த செயலியை பாராட்டியுள்ளனர் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பணியிடங்களில் யோகா செய்ய வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தால் அது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார். மேலும் அவர் இந்த செயலி காட்டுத் தீ மாதிரி பரவ வேண்டும். என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications