சிறு சேமிப்பு திட்டங்கள்... அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு.. நிதியமைச்சகம் அறிவிப்பு
டெல்லி: பல்வேறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாளை ஏப்ரல் 1ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களைக் குறைத்து நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வங்கி சேமிப்பு கணக்குகளின் ஆண்டு வட்டி 3.5%ஆக குறைக்கப்படுகிறது. இது தற்போது 4%ஆக உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF வட்டி 7.1%இல் இருந்து 6.4%ஆக குறைக்கப்படுகிறது.
ஓராண்டுக் கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5%ல் இருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 7.4%இல் இருந்து 6.5%ஆக குறைக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில் வட்டி காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 5.9 சதவீத வட்டியையும், சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்திற்கு 6.9 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் 6.2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக சேமிப்பு வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 4.4-5.1 சதவீதமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஆன வைப்புத் தொகைக்கு வட்டி 5.8 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓர் ஆண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.












Click it and Unblock the Notifications