பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.3ஆக உயர்த்திய மத்திய அரசு! அடுத்த அதிரடி அறிவிப்பு!
டெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.
மத்திய அரசு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு ஒரு லிட்டருக்கு ₹3 சிறப்பு கூடுதல் கலால் வரியை (SAED) விதித்துள்ளது. இன்று முதல் இது அமலுக்கு வருகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படும் இந்த வரி, புதிய திருத்தத்திற்கு முன் பூஜ்ஜியமாகவே இருந்தது.

அறிவிப்பின்படி, டீசல் ஏற்றுமதிக்கான SAED வரி ஒரு லிட்டருக்கு ₹23லிருந்து ₹16.5 ஆகவும், விமான எரிபொருளுக்கான (ATF) வரி ஒரு லிட்டருக்கு ₹33லிருந்து ₹16 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் மே 16 முதல் அடுத்த 15 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
அதேநேரம், உள்நாட்டுப் பயன்பாட்டிற்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. மாறாக இந்தியாவிடம் எரிபொருளை வாங்கும் நாடுகளில் விலை மாற்றம் ஏற்படும்.
மேற்கு ஆசிய நெருக்கடியின் விளைவாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், உள்நாட்டு எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யவும், அதிகப்படியான ஏற்றுமதியைத் தடுக்கவும், மார்ச் 27 அன்று பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி வரிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சமீபத்திய 15 நாள் காலங்களில் தொடர்ச்சியான வரி சீரமைப்புகளுக்குப் பிறகே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக, டீசல் மற்றும் விமான எரிபொருட்களின் ஏற்றுமதி வரி முறையே ஒரு லிட்டருக்கு ₹55.5 மற்றும் ₹42 ஆக கணிசமாக அதிகமாக இருந்தது. பின்னர், இவை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தன. பெட்ரோல் ஏற்றுமதி வரி, இந்த அறிவிப்பு வரை பூஜ்ஜியமாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications