விவசாய சட்டங்களை குப்பையில் போடுங்கள்.. ராகுல் காந்தி ஆவேசம்.. செங்கோட்டை சம்பவம் பற்றியும் கேள்வி
டெல்லி: வேளாண் சட்டங்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு அறிவுரை கூறியுள்ளார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் பெரிய அளவில் பரவும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் குடியரசு தினம் நாளில் விவசாயிகள் நடத்திய பேரணியின் போது சிலர் செங்கோட்டைக்குள் புகுந்து கொடி நாட்டினர். அப்போது தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் பற்றி இன்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ராகுல்காந்தி. அவர் கூறுகையில்,
செங்கோட்டை உள்ளே விவசாயிகளை அனுமதித்தது யார்? செங்கோட்டைக்கு உள்ளே போக விடாமல் காவல்துறையில் தடுக்காமல் இருந்தது ஏன்? இதன் பின்னணியில் என்ன நோக்கம் இருக்கிறது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் தெரிவிக்க வேண்டும்.
விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரவேண்டும். விவசாய சட்டங்கள் மூன்றையும் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுவது தான் இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வாக இருக்கும்.
விவசாயிகள் வீடுகளுக்கு திருப்பி விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். எனது கவலையெல்லாம் இந்த போராட்டம் மேலும் தீவிரமாக பரவி விடும் என்பது தான். ஆனால் போராட்டம் தேவை இல்லை, நமக்கு தேவை தீர்வு. இதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய சட்டங்களை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறுகிறது அதை செய்வதற்கு பதிலாக வாபஸ் பெற்று விட்டு அறிவித்தால் போதும். இந்தப் பிரச்சினை அனைத்தும் தீர்ந்துவிடும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.