சபாஷ்..! மின்னல் வேகத்தில் நடக்கும் வேக்சின் பணிகள்.. கடைசி 22 நாட்களில் 18 கோடி பேருக்கு தடுப்பூசி
டெல்லி: இந்தியாவில் இதுவரை 66% மக்களுக்குக் குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தற்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட வேக்சின் பணிகள் இப்போது தான் மெல்ல வேகமெடுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

75% பேருக்கு வேக்சின்
இந்தியாவில் வேக்சின் பணிகள் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் கூறுகையில்,"இந்தியா மக்கள்தொகையில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 66% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் போடப்பட்டுள்ளது. அதேபோல 18+ நபர்களில் கிட்டதட்ட 25% பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்தில் 18 கோடிக்குப் பேருக்கு வேக்சின்
இந்தியாவில் இதுவரை மொத்தம் 61.85 கோடி பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 21.55 கோடி பேருக்கு இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இதுவரை முதல் 22 நாட்களில் மட்டும் 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் போடப்பட்ட தடுப்பூசிகளைக் காட்டிலும் அதிகமாகும். கடந்த மாதம் ஒட்டுமொத்தமாகவே 18 கோடி தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பதால் வரும் காலங்களில் வேக்சின் பணிகள் மேலும் வேகமெடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

6 மாநிலங்களில் 100% வேக்சின்
இதுவரை நாட்டில் 6 மாநிலங்கள் - லட்சத்தீவு, சண்டிகர், கோவா, இமாச்சலப் பிரதேசம், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் தங்கள் மக்கள்தொகையில் 100% பேருக்குக் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், நான்கு மாநிலங்கள் - தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, கேரளா, லடாக் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் 90 சதவீதம் பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சுகாதார ஊழியர்களில் 99% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 84% பேருக்கு முழுமையாக வேக்சின் போடப்பட்டுள்ளது.

உலக நாடுகள்
இந்தியா வேக்சின்களை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இதில் விரைவில் நிரந்த தீர்வு எட்டப்படும் என்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார இன்னும் சில வாரங்களில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்தும் சில நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. பிரிட்டன் நாடு கடந்த சில நாட்களுக்கு முன் தான் கோவிஷீல்டு வேக்சினுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருந்தது. அதேநேரம் கோவின் சான்றிதழில் இருக்கும் சில சிக்கல் காரணமாக இந்தியாவில் இருந்து வருவோர் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications