பாகிஸ்தானை அம்பலப்படுத்த வெளிநாடு செல்லும் எம்பிக்கள் குழு.. காங், திமுக எம்பிக்களும் செல்கிறார்கள்
டெல்லி: பாகிஸ்தானின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லவும் பல்வேறு வெளிநாடுகளுக்கு பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் குழுக்களை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த எம்பிக்கள் குழுவில் பாஜக, காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இடம் பெற உள்ளார்கள்.
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானில் இந்தியாவிற்கு எதிராக இயங்கி வந்த தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா ட்ரோன்களையும், விமானங்களையும் அனுப்பி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் பெரிய பாதிப்பை சந்தித்த நிலையில் , கடந்த மே 10-ந் தேதி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்றும், அந்நாட்டின் உண்மையான பயங்கரவாத முகத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
இதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியா முக்கிய கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை அனுப்பி வைக்க மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்தனை குழுக்கள், எத்தனை எம்.பி.க்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த குழுவில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வறு கட்சிகளைச் சேர்ந்த 30-க்கு மேற்பட்ட எம்.பி.க்கள் அனுப்பி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
பாஜக, காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுக்களில் இடம் பெறுவார்கள். குறிப்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர், அபராஜிதா சாரங்கி ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சசிதரூர், மணீஷ் திவாரி, சல்மான் குர்ஷித், அமர்சிங் ஆகியோரும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுகவைச் சேர்ந்த கனிமொழி , சுதிப் பந்தோபாத்யாயா, சஞ்சய் ஜா, ஜான் பிரிட்டாஸ், சஸ்மித் பத்ரா, சுப்ரியா சுலே, அசாதுதின் ஒவைசி உள்ளிட்டோரும் வெளிநாடுகளுக்கு செல்லும் குழுக்களில் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளிநாடு செல்ல உள்ள எம்பிகளின் கட்சிகளுக்கு மத்திய அரசு சார்பில் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். இதற்கும் அனைத்து கட்சிகளும் பச்சைக்கொடி கட்சிகளுமே புறப்பட தயாராக உள்ளன. வரும் மே 22 அல்லது 23-ந் தேதி வாக்கில் புறப்பட தயாராக இருக்குமாறும், 10 நாட்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
அதேநேரம் எம்பிக்கள் குழுவினருக்கு புறப்படுவதற்கு முன்பு, வெளிநாடுகளில் பேச வேண்டியது குறித்து அவர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளிக்கும் என்றும் அவர்களுடன் வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் இருக்கும். பயண திட்டம் உள்ளிட்ட தேவையான தகவல்களை அளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒதுக்கப்பட்ட நாட்டுக்கு அந்த குழு செல்லும் என்றும் அங்கு இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications